கேப்டன் மில்லரை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 51வது படம் ஆரம்பம்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தின் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படம் அண்மையில் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 51வது படத்தை தேசிய விருதுபெற்ற இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார்.
இதில் நடிகர் நாகர்ஜுனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.
முதல்கட்டமாக படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதில் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். நாகர்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் விரைவில் படப்பிடிப்பில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.



