நீர்கொழும்பு பிட்டிபன இறங்குதுறை: பேராயரும் மீனவர்களும் முரண்படுவது ஏன்?

#SriLanka #Colombo
Mayoorikka
2 years ago
நீர்கொழும்பு பிட்டிபன இறங்குதுறை: பேராயரும் மீனவர்களும் முரண்படுவது ஏன்?

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் நீர்கொழும்பில் உள்ள மீன்பிடி இறங்குதுறையின் உரிமம் தொடர்பில் மீனவர் சங்கத்திற்கும் இலங்கை கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

 நீர்கொழும்பு - பிட்டிபன இறங்குதுறையின் நிர்வாகத்தை தங்களுக்கு வழங்குமாறு கோரி கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்திற்கு முன்பாக இந்த வார ஆரம்பத்தில் (பெப்ரவரி 19) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 2008ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இறங்குதுறையின் நிர்வாக உரிமை தொடர்பான வழக்கில் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நீண்ட விசாரணையின் பின்னர் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

 கொழும்பில் உள்ள புனித பாப்பரசரின் பிரதிநிதிகளிடம் மீனவர்கள் தமது பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்ததோடு, பேராயர் இல்லத்திற் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

 என்ன பிரச்சினை?

 2008ஆம் ஆண்டு, அப்போதைய கொழும்பு பேராயர் ஒஸ்லோல்ட் கோமிஸ், இறங்குதுறையை நிர்வகிப்பது குறித்து விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பிடிபன ஐக்கிய மீனவர் சங்கம் மீறியுள்ளதாக தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்தார். குறித்த இறங்குதுறை அமைந்துள்ள காணி கொழும்பு பேராயருக்கே சொந்தமானது எனவும், அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தனது பிரதிநிதியை இறங்குதுறையை நிர்வகிப்பதற்கு நியமிக்குமாறும் அப்போதைய கொழும்பு பேராயர் மனுவில் கோரியிருந்தார். அந்த கோரிக்கைக்கு அமைய, நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பெப்ரவரி 02, 2024 அன்று, இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததுடன், இறங்குதுறை நிர்வகிக்க பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும், நியமிக்கப்படும் பிரநிதியிடம் சொத்து தொடர்பான கணக்குகள் மற்றும் எஞ்சிய பணத்தை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

 இறங்குதுறை அன்பளிப்பாக வழங்கப்பட்டதா?

 நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறையின் உரிமம் கொழும்பு பேராயர்க்கே காணப்படுவதாக கொழும்பு பேராயரின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 1963ஆம் ஆண்டு, அப்போதைய கொழும்பு பேராயர் அருட்தந்தை தோமஸ் கர்தினால் குரே, சில நிபந்தனைகளின் அடிப்படையில் அன்பளிப்பு உரிமை பத்திரம் ஊடாக நீர்கொழும்பு பிடிபன ஐக்கிய மீனவர் சங்கத்திடம் இந்த இறங்குதுறையை ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஐக்கிய மீனவர் சங்க நிர்வாகிகள், உரிய அன்பளிப்புப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறி, கொழும்பு பேராயரின் முன் அனுமதியின்றி, சொத்தின் ஒரு பகுதியையும், கடை அறைகளையும் வெவ்வேறு நபர்களுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும், அந்த வருமானத்தை பிடிபன மேசாவில் வசிக்கும் மீனவர்களின் நல்வாழ்வுக்காக செலவிடுவதற்கனெ, பிடிபன தேவாலயத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை மீறி, தனி நபர்கள் அந்த வருமானத்தை அனுபவிப்பதாகவும், அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார். 

 எனினும், இறங்குதுறையின் உரிமம் தமக்கே காணப்படுவதாகவும், கத்தோலிக்க திருச்சபையே காணி உரிமத்தை வழங்குவதில் தம்மை ஏமாற்றியுள்ளதாகவும், மீனவர் தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரசங்க பெர்னாண்டோ தெரிவிக்கின்றார். “1963 காணியை உரிமை பத்திரத்தை எமக்கு எழுதினார்கள். 

அசல் காணி உரிமை பத்திரத்தை எழுதாமல், அன்பளிப்பு உரிமை பத்திரத்தை எழுதினர். அன்பளிப்பு உரிமை பத்திரத்தை எழுதி நான்கு நிபந்தனைகளையும் விதித்தனர். அது மிகவும் கொடுமையானது. எமது பணத்தில் ஒரு பொருள் வாங்கும் போது அன்பளிப்பு உரிமை பத்திரத்தை கொடுக்க முடியாது. 

அசல் உரிமை பத்திரத்தை கொடுக்க வேண்டும்.” நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறையின் உரிமையை மீளப் பெற்றுத்தருமாறு கோரியே பேராயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அருட்தந்தை சிறில் காமினி வலியுறுத்தியுள்ளார். எவ்வாறெனினும், தற்போது அரசியல்மயப்பட்டுள்ள கொழும்பு பேராயர், நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறையின் நிர்வாகத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு வழற்குவதற்கு திட்டமிட்டுள்ளாாக பிரசங்க பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4