மன்னாரில் டக்ளஸ் தேவானந்தாவிடம் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
மன்னாரில் டக்ளஸ் தேவானந்தாவிடம் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை கிராமத்தில் மிக நீண்ட காலமாக பழமை வாய்ந்த ஐஸ் தொழிற்சாலை கிராமத்தின் பிரதான பகுதியில் பாழடைந்த நிலையில்  காணப்படுகின்றது.  

குறித்த ஐஸ் தொழிற்சாலை வளாகத்தில் முறை கேடான செயல்கள் இடம்பெற்று வருகின்றமை குறித்து மக்களினால் முறைப்பாடுகளும் முன் வைக்கப்பட்டு வந்தது.   

குறித்த ஐஸ் தொழிற்சாலை மிக நீண்ட காலமாக பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் காணப்படுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வந்துள்ளார்கள். 

பேசாலை கிராமத்தில் தபால் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வருகிறது.பஸ் தரிப்பு நிலையம் பிரதான வீதியிலேயே பஸ்கள் தரித்து இருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வந்த நிலையிலும்,சந்தை கட்டிடத் தொகுதி இல்லாமல் கிராமத்தின் ரயில்வே பிரதான வீதியில் குறித்த நாட்களில் வியாபார நடவடிக்கை காணப்பட்டு வருகிறது.  

images/content-image/1713619716.jpg

மேலும் ஆயுர்வேத வைத்திய நிலையம் வசதி குறைந்த ஒரு சிறிய மண்டபத்தில் இடம்பெற்று வந்தது.  

இந் நிலையை கருத்தில் கொண்டு  பழைய ஐஸ் தொழிற்சாலை மற்றும் அதனோடு கூடிய இடத்தை ஆயுர்வேத வைத்திய நிலையம் அமைக்க வசதியாக தந்து உதவுமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இந்த நிலையில் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (20.04) காலை பேசாலை பகுதிக்கு விஜயம் செய்து ஐஸ் தொழிற்சாலை மற்றும் மீனவ கூட்டுறவு சங்க அலுவலகம் மற்றும் கடற்கரை பகுதியையும் பார்வையிட்டார். 

இந் நிலையில் தமது தேவைகளை வலியுறுத்தி பேசாலை கிராமத்தின் மீனவர் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் ,பொதுமக்கள் ஒன்று கூடி உதவி பங்கு தந்தை அவர்களின் தலைமையில் அமைச்சரை ஐஸ் தொழிற்சாலை பகுதியில் வரவேற்றதுடன், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

இதனை அடுத்து அமைச்சர் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய செப மண்டபத்தில் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தாம் நிறைவேற்றி தருவதாக வாக்களித்தார்.

 பழைய ஐஸ் தொழிற்சாலையை அகற்றுவதற்கும் உடன் நடவடிக்கை எடுக்கவும் மக்கள் கோரிய திட்டங்களை அமுல் படுத்துவதற்கான நடவடிக்கையையும் முன்னெடுப்பதாக தெரிவித்தார்.  

இதனை அடுத்து பேசாலை மீனவர் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கும் கடற்கரை பகுதிக்கும் சென்று பார்வையிட்டு மீனவர்கள் கோரிய எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்ட இந்திய மீனவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.