மத்திய ஆப்பிரிக்க நாட்டில் படகு கவிழ்ந்து விபத்து - 58 பேர் பலி

#Death #water #Country #Boat #collapse #Africa
Prasu
2 weeks ago
மத்திய ஆப்பிரிக்க நாட்டில் படகு கவிழ்ந்து விபத்து - 58 பேர் பலி

மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டின் தலைநகர் பாங்குயி நகரில் மாகோலோ கிராமத்தின் தலைவர் மரணம் அடைந்துள்ளார். 

அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள், மபோகோ ஆற்றை கடந்து மறுபுறம் செல்வதற்காக ஒரு படகில் புறப்பட்டனர். இரண்டு அடுக்கு கொண்ட மிகப்பெரிய மரப்படகில் 300க்கும் மேற்பட்டோர் சென்றதாக கூறப்படுகிறது. 

இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பாரம் தாங்காமல் படகு தள்ளாடத் தொடங்கியது. எனினும் தொடர்ந்து படகை செலுத்தி உள்ளனர். ஒரு கட்டத்தில் படகின் மேற்பகுதி திடீரென உடைந்தது. 

இதனால் அதில் நின்றிருந்தவர்கள் படகிற்குள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். படகும் நிலைதடுமாறி கவிழ்ந்தது. படகின் ஓரமாக இருந்தவர்கள், மரக்கட்டையில் அமர்ந்திருந்தவர்கள் வெளியே குதித்து நீந்தி கரையை நோக்கி வந்தனர்.

படகு கவிழ்ந்ததை கவனித்த பிற படகோட்டிகள் மற்றும் மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரசின் அவசரகால மீட்புக்குழுவினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

ஆற்றில் விழுந்தவர்களில் 58 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிலரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நீருக்கடியில் மேலும் பலர் இறந்து கிடக்கலாம், ஆனால், மொத்த எண்ணிக்கை தெரியவில்லை என்று சிவில் பாதுகாப்பு குழு தலைவர் கூறியுள்ளார்.