மனைவியை கொல்வதற்காக பிள்ளைகளை பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த தந்தை கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
மனைவியை கொல்வதற்காக பிள்ளைகளை பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த தந்தை கைது!

ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

ஜல்தர, ஹன்வெல்ல அரச ஊழியர் வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று (05.05) தனது மனைவியைக் கொல்வதற்காக கைக்குண்டுடன் தனது வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 

எனினும் அந்த நேரத்தில் குறித்த பெண் வீட்டை விட்டு ஓடியதையடுத்து குறித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளையும் வீட்டின் அறையொன்றில் பிணைக் கைதிகளாக வைத்திருந்துள்ளார்.  

10 வயது சிறுமியும், இரண்டு வயது ஆண் குழந்தையும் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இது தொடர்பில் கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக செயற்பட்ட ஹங்வெல்ல பொலிஸ் அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். 

சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.  

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.