முன்னாள் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்லவிற்கு விளக்கமறியல் நீட்டிப்பு!
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (06.05) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் துசித சுதர்சன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) பெப்ரவரி 02 ஆம் திகதி, நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க, அங்கு வந்த போது, தரமற்ற மனித நரம்பு இம்யூனோகுளோபுலின் (IVIG) கொள்வனவு தொடர்பில் ரம்புக்வெல்லவைக் கைது செய்தது.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 10 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.