இலங்கையில் விவசாயம் மற்றும் வனப் பாதுகாப்பு திட்டத்திற்காக இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் கைச்சாத்து!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
இலங்கையில் விவசாயம் மற்றும் வனப் பாதுகாப்பு திட்டத்திற்காக இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கையில் விவசாயம் மற்றும் வனப் பாதுகாப்பு திட்டத்திற்காக இணைந்து பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர்  ருவான் விஜேவர்தன, மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி, காலநிலை இடர் மன்றத்தின் செயலாளர் நாயகம்  மொஹமட் நஷிடி, போர்ச்சுகலின் Navita Capital இன் பிரதம நிறைவேற்று அதிகாரி  கார்லோஸ் கோமஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 

பண்ணை விளைச்சலையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதற்காக மேம்படுத்தப்பட்ட மற்றும் நிலையான விவசாய முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் கிராமப்புற சமூகங்களில் வீட்டு விவசாயத்தை மேம்படுத்துவது இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஒப்பந்தத்தின் கீழ் 100 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டு அனுராதபுர மாவட்டத்தில் ஒரு முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படும். 

இதன் கீழ் 15,000 விவசாய குடும்பங்களுக்கு தேவையான ஆதரவும் தொழில்நுட்பமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலநிலை இடர் மன்றத்தின் ஆதரவுடன் இலங்கையினால் வரையப்பட்ட இலங்கையின் காலநிலை மீள்திறன் திட்டத்தின் ஊடாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விவசாயம் மற்றும் வனவியல் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

நவீன விவசாயத்தை உருவாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்திற்கமைவாக, நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்க போர்த்துகீசிய நிறுவனம் ஒன்று முதலீட்டாளராக முன்வந்துள்ளது.  

இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு அனுராதபுரம் மாவட்டத்தில் 15,000 குடும்பங்களும் 15,000 ஏக்கரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.