ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யார் இணைந்தாலும் சம அங்கீகாரம் கொடுப்போம் - கோவிந்தன் கருணாகரம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யார் இணைந்தாலும் சம அங்கீகாரம் கொடுப்போம் - கோவிந்தன் கருணாகரம்!

தமிழ் தேசிய பரப்பில் தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் எக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தாலும்,அவர்களுக்கான சம அங்கீகாரம் கொடுத்து தொடர்ச்சியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை  செயல்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என கிழக்கு மாகாண ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.  

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர் .குமரேஸ் தலைமையில் மன்னாரில் மாவட்ட குழு அமைக்கும் நடவடிக்கை இடம் பெற்றது.   

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அங்கத்துவ கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு கருத்து வெளியிட்ட கோவிந்தன் கருணாகரம், கடந்த 2001 ஆம் ஆண்டு முரண் பாடுகளுக்கு மத்தியில் இருந்த போராட்ட இயக்கங்கள்,மதவாத கட்சிகள் எல்லாம் இணைந்து ஒன்றிணைந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய காலத்தில் இருந்து இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பல கட்சிகள் வெளியேறியுள்ளன. சில கட்சிகள் உள்ளே நுழைந்தார்கள். எப்படி இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறது. 

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமிழரசுக்கட்சி வெளியேறியதை தொடர்ந்து மீதமிருந்த தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தமிழ் மக்கள் விடுதலைக்கழகம்(புளொட்),ஆகியவை இணைந்து ஏற்கனவே வெளியேறிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபி.ஆர்.எல்.எப்),ஜனநாயக போராளிகள் கட்சி ,மற்றும் தமிழ் தேசிய கட்சி உட்பட ஐந்து கட்சிகளும் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற பெயரில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக நாங்கள் இன்று வரை செயல்பட்டு வருகிறோம்.  

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பது தேர்தல் திணைக்களத்தில் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயங்குவதைப் போல் அல்லாமல் தற்போதைய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற பெயரில் ஒரு கட்டமைப்புடன் நாங்கள் இயங்கிக் கொண்டு வருகின்றோம். 

அந்த வகையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஒரு நிறைவேற்றுக் குழு இருக்கிறது. நிறைவேற்றுக் குழு எடுக்கின்ற முடிவு தான் இறுதி முடிவாக இருக்கும் இவ் வேளையில் தற்போது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயல்பாடுகளை மாவட்ட ரீதியாக நாங்கள் விஸ்தரித்து கொண்டு வருகிறோம். ஒவ்வொரு மாவட்டமாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் மாவட்ட கிளைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. 

அதற்கமைவாக யாழ்ப்பாணம்,வவுனியா,திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாரை போன்ற மாவட்டங்களில் மாவட்டக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில்,இன்று (11.05) மன்னாரில் மாவட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

 ஏனைய மாவட்டங்களில் மாவட்ட குழுவை உருவாக்கி மிக விரைவில் இந்த மாவட்ட குழுக்களின் சம்மேளனத்தை நாங்கள் கூட்டி,ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயல்பாடுகளை தொகுதி,பிரதேச மற்றும் வட்டார ரீதியாக உருவாக்கி,தமிழ் மக்களுக்கு உரித்தான எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.  

அந்த வகையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஒரு கட்டமைப்பு இருக்கிறது.இணைத்தலைவர்கள் இருக்கிறார்கள். தேவையான பதவிகள் இருக்கின்றன.அதற்கான யாப்பும் உள்ளது.

யாப்பின் அடிப்படையில் தமிழ் தேசிய பரப்பில் செயல்படும் தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் எக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தாலும்,அவர்களுக்கான சம அங்கிகாரத்தை கொடுத்து தொடர்ச்சியாக இந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யை செயல்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4