வவுனியாவில் இலவச அரிசிக்கு பணம் வசூலிக்கும் கிராம சேவகர்கள்!
![வவுனியாவில் இலவச அரிசிக்கு பணம் வசூலிக்கும் கிராம சேவகர்கள்!](https://ms.lanka4.com/images/thumb/1718508010.jpg)
ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி பொதி வழக்கும் செயற்திட்டத்தின் போது வவுனியாவில் சில சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணம் அறவிடுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஊட்டச்சத்து மட்டத்தை பேணுவதற்காக ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய தேசிய வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில 10 கிலோ அரிசி பொதிகள் கடந்த சில நாட்களாக மக்களுக்கு வழங்கும் போது எந்தவித சிட்டைகளும் இன்றி சமுர்த்தி உத்தியோகத்தர்களால் 1000 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பணம் அறவிடப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், இதனால் பணம் செலுத்த முடியாத நிலையில் சிலர் உரிய காலப்பகுதியில் அரிசி பொதியை பெறவில்லை என்பதுடன், மற்றும் சிலர் பிறரிடம் கடன்பெற்று பணம் செலுத்தியே அரிசி பொதியை பெற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட சில பகுதிகளில் பல்வேறு தொகைகளில் இவ்வாறு பணம் பெறப்படுவதாகவும் 500- 1000 ரூபாய் வரை பணம் செலுத்தியே 10 கிலோ அரிசியை பெற வேண்டியுள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.