அனைத்துலக யோகாக் கலை நாள் இன்று!(International Yoga Day)

5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய உடற்பயிற்சி, தியான முறை ஓகக் கலை ஆகும். அதில் யோகாசனம் (ஓகஇருக்கை) குறிப்பாக உடற்பயிற்சியையும் உருநிலைகளையும் குறிக்கும்.
ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம்.
ஓகஇருக்கை (யோகாசனம் ) என்பது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். ஓகஇருக்கை பயிற்சியின் நோக்கம் உடல்நலம் அடைவது மட்டுமே அல்ல என்றாலும் பயிற்சி மேற்கொள்பவர் பல விதங்களில் உடல்நலம் அடைகிறார், பல நோய்களில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்கிறார். இப்படி உடல் அளவிலும் மன அளவிலும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் கிடைக்கின்றன.
மகிழ்ச்சி, அமைதி, உடல் ஆரோக்கியம் போன்றவை கிடைக்கின்றன. ஓக இருக்கைகளுடன் மூச்சுப்பயிற்சியும் சேர்த்து செய்தால் உள் உறுப்புகள் வலிவுறும்; உடம்பின் வளையும் தன்மை(flexibility) வளமாகும். ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிவகுக்கும். நோயெதிர்ப்பு பெருகும்.
ஓகக்கலையின் தந்தையாக சிவபெருமான் அறியப்படுகிறார்.பதஞ்சலி முனிவர் ஓகக்கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் என கருதப்படுகிறார். இது எங்கள் 64 ஆயகலைகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



