கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் ரணில்! ஆளுநர் பாராட்டு

#SriLanka #Sri Lanka President #Governor #Ranil wickremesinghe #education
Mayoorikka
2 years ago
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் ரணில்! ஆளுநர் பாராட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வியின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்ந்துள்ளதால், அதற்கான நிதியொதுக்கீடு உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கரிசனையுடன் நடந்து கொள்வதாக ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

 வடமேல் மாகாணத்தில் 1671 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) குருநாகல் நகர மண்டபத்தில், ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத் , சிந்தக அமல் மாயாதுன்ன , அசங்க நவரத்ன, சுமித் உடுகும்புற, அலி சப்ரி ரஹீம் மற்றும் மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்தின, மாகாண கல்வி அமைச்சு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

 இங்கு தொடர்ந்தும் பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் மேலும் கூறியதாவது, இலங்கையில் தற்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் கூட கடுமையான தட்டுப்பாடு நிலவியது. மின்சாரம் இன்றி மக்கள் மணிக்கணக்கில் அவதிப்பட்டார்கள். ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது. 

அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், தட்டுப்பாடு இன்றி தாராளமாக கிடைக்கின்றது. வரிசை யுகங்கள் மறைந்து நாடு ஓரளவுக்கு சுபீட்சமடைந்துள்ளது மறுபுறத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள சுபீட்ச நிலை காரணமாக தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கான நிதியொதுக்கீடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக தற்போது தொழில் வரிசைகள் உருவாகியுள்ளன. அதன் ஒரு கட்டமாகவே இன்று உங்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக நாங்கள் நான்காயிரத்து இருநூறு பேரளவானோருக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் இன்னும் சிறிது காலத்திற்குள் தொழில் வரிசைகளும் இல்லாதொழிக்கப்படும். தகுதி வாய்ந்த அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதன் இன்னொரு கட்டமாக வடமேல் மாகாணத்தின் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இன்னும் ஆயிரத்து ஐநூறு பேரளவிலானோருக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் வழங்க உள்ளோம். 

 அதற்கான வயது எல்லையை முப்பத்தி ஐந்தில் இருந்து நாற்பது வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாட்டின் எதிர்காலம் கல்வி கற்ற சமூகத்தின் கைகளில் தங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வியின் முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்ந்துள்ளார். அதன் காரணமாக கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றார். அவரின் கல்விக் கொள்கையை அடியொற்றி, வடமேல் மாகாணத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

 வடமேல் மாகாணத்தை , நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் முன்னணி மாகாணமாக முன்னேற்றுவதே எமது இலக்காகும். அதற்கான முக்கிய பொறுப்பு, இன்று பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறும் உங்கள் கைகளில் தங்கியுள்ளது. எதிர்கால சந்ததியினரை , நாட்டின் எதிர்கால தலைவர்களை தயார்படுத்தும் பாரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதனை உரிய முறையில் மேற்கொண்டு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் செயற்பட வேண்டும் என்றும் ஆளுநர் நஸீர் அஹமட் வலியுறுத்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4