மூதூரில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை

#SriLanka #Sri Lanka President #Trincomalee
Mayoorikka
2 days ago
மூதூரில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை

மூதூர் - இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற மதுபானசாலைக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 15 பேரும் வெள்ளிக்கிழமை (28) மூதூர் நீதிமன்றால் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 குறித்த வழக்கானது எதிராளிகள் சார்பாக நகர்த்தல் விண்ணப்பத்தின் மூலம் மூதூர் நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட அனைவரும் நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.தஸ்னீம் பௌசானின் முன்னிலையில் திறந்த நீதிமன்றில் நூற்றுக்கும் அதிகமானவர்களுடன் ஆள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள்.

 பின்னர் ஒவ்வொருவரும் தலா 50000 பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததோடு, எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்ட மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை (25 ) அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இரவு 8.00 மணிக்குப் பின்னர் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்த கைகலப்பை காரணம்காட்டி அங்கிருந்தவர்கள்மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். 

பின்னர் அவ்விடத்திற்கு மேலதிக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதும், அதனுடன் தொடர்புபடாத மக்கள் மீதும் வீடுகளில் இருந்த நிலையிலும், பாதுகாப்புத்தேடி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள்மீதும் மிலேச்சுத்தனமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

 குறித்த சம்பவத்தில் பாடசாலை மாணவன் உட்பட 11 ஆண்களும், பாலூட்டும் தாய் உட்பட 4 பெண்களுமாக, 15 பேர் போலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்ததுடன் 13 துவிச்சக்கரவண்டி, 11 மோட்டார் சைக்கிள், 3 முச்சக்கரவண்டி ஆகியனவும் கொண்டு செல்லப்பட்டிருந்தன. கைது செய்யப்பட்டவர்கள் மறுநாள் புதன்கிழமை (26) பொலிஸாரினால் , நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்கள். 

இதன்போது எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கானது வியாழக்கிழமை (27) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நகர்த்தல் விண்ணப்பத்தின் மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டு எதிராளிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த சில வழக்குப் பிரிவுகள் பொலிஸாரினால் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.