காதலியை கொலை செய்து கிணற்றுக்குள் வீசிய காதலன்! திருகோணமலையில் சம்பவம்

#SriLanka #Trincomalee
Mayoorikka
2 years ago
காதலியை கொலை செய்து கிணற்றுக்குள் வீசிய காதலன்! திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவின் கிளிவெட்டி பகுதியில் உள்ள பாலடைந்த கிணற்றிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

 பாலடைந்த கிணற்றில் சடலமொன்று கிடப்பதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அகழ்வு செய்வதற்காக மூதூர் நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றிருந்தனர். இந்நிலையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் குறித்த கிணறானது பெக்கோ இயந்திரம் மூலம் இன்று அகழ்வு செய்யப்படபோதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சேருநுவர - தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நடேஸ்குமார் வினோதினி என தெரியவருகின்றது. மீட்கப்பட்ட சடலமானது சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. அத்தோடு யுவதியின் கைப் பையும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யுவதி, காதலனினால் கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் 25 வயதான காதலன் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது- குறித்த யுவதியும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அயல் கிராமமான கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் விஷ்னுகாந்த் என்ற 25 வயது இளைஞனும் காதலித்து வந்ததாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையில் கடந்த மே மாதம் குறித்த யுவதி காதலனுடன் மட்டக்களப்பிற்கு சென்று வசித்து வந்ததாகவும் மே மாதம் 31ஆம் திகதி மாலை அழுது கதைத்த குரல் பதிவொன்றை குடும்பத்தாருக்கு அனுப்பியிருந்ததோடு அன்றையதினம் இரவு வீடியோ அழைப்பில் குடும்பத்தாருடன் கதைத்திருந்ததாகவும், இதன்போது வீட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்ததாகவும் அதன் பின்னர் அவருடன் தொடர்பு இல்லாமல் போயிருந்ததாகவும் தெரியவருகின்றது.

 இதனை அடுத்து குறித்த காதலனின் இலக்கத்திற்கு யுவதியின் குடும்பத்தார் பல முறை முயற்சித்தபோதும் யூன் மாதம் 13ஆம் திகதி அழைப்பை எடுத்து தான் வேலையில் நிற்பதாகவும், வீட்டுக்குச் சென்று அக்காவுடன் கதைக்க கொடுப்பதாகவும் குறித்த யுவதியின் தம்பியிடம் தெரிவித்ததாகவும் தெரிய வருகின்றது. இதன் பின்னர் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் யுவதியின் குடும்பத்தாரால் சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் யூலை மாதம் 1ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 அத்துடன் கொலை செய்து போடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த கிணறானது ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் அருகில் இருந்த குப்பைகளைக் கொண்டு குறித்த காதலனினால் மூடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டபோதே யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யுவதியின் காதலன் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4