ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ முன்வைத்துள்ள கோரிக்கை!
ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்ட வேட்பாளருக்கு ஆதரவளித்தால், அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற வேண்டும் என அதன் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு இடையில் இன்று (25.07) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான விஜேராம மாவத்தையில் இன்று சந்தித்து, எதிர்வரும் அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொஹொட்டுவ ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று இந்த சந்திப்பில் இணைந்துள்ளது.
இதேவேளை, பொஹொட்டுவ அமைப்பின் ஸ்தாபகர் திரு.பசில் ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.