யாழ்ப்பாணத்தில் கனேடிய தமிழ் குடும்பம் மீது வன்முறை! ஒரு வருடத்தின் பின்னர் சந்தேகநபர் கைது

#SriLanka #Attack
Mayoorikka
1 month ago
யாழ்ப்பாணத்தில் கனேடிய தமிழ் குடும்பம் மீது வன்முறை! ஒரு வருடத்தின் பின்னர் சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் அனலைதீவில் கனேடிய தமிழ் குடும்பம் மீது வன்முறை கும்பலொன்று நடாத்திய தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரொருவர் ஒரு வருடத்தின் பின்னர் நேற்று கைது செய்யப்பட்டார்.

 பரந்தன் பகுதியில் உள்ள பெண்ணொருவரே யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

 அனலைதீவில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ம் திகதி கனேடிய தமிழ் குடும்பமொன்றின் மீது வன்முறை கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தியதுடன், பெருமளவு வெளிநாட்டு நாணயம் மற்றும் பொருட்கள், நகைகள் என்பனவும் கொள்ளையடித்துச் சென்றது.

 குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். அதேவேளை பிரதான சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த சம்பவத்தை வெளிநாட்டில் உள்ள ஒருவரின் பணிப்பில் உள்ளூரில் வழிநடத்தியதாக கருதப்படும் பெண் கைது செய்யப்பட்டார்.

 குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கனடாவில் உள்ள ஐயப்பன் கோயிலொன்றின் தலைவர் சொல்லியே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்ததுடன் அதற்குரிய ஆதாரங்களையும் சமர்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த பெண் சில குற்ற சம்பவ வழக்குகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 48 மணி நேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் விசாரிக்க நீதவான் அனுமதியளித்தார்.