பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த தேயிலை கைத்தொழிலை ஊக்குவித்தல் அவசியம்!

#SriLanka #Export #Tea
Mayoorikka
1 month ago
பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த தேயிலை கைத்தொழிலை  ஊக்குவித்தல் அவசியம்!

ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவித்தல் இன்றியமையாதது எனவும் இதற்கான முறையான திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமான 'கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டின்' ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

 கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கமும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து 'தேயிலை – ஒரு வாழ்க்கை முறை மற்றும் வாழ்வாதாரம்' என்ற தொனிப்பொருளில் இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

 இலங்கையில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் அது தொடர்பான வர்த்தகங்களின் கண்காட்சியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, கென்யா, சீனா, இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், நிபுணர்கள், முன்னணி வர்த்தக நாமங்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றன. நம்நாட்டு தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புள்ள பல வர்த்தகங்களின் கண்காட்சிகளும் இதனுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 கொழும்பு தேயிலை வர்த்தகச் சங்கத்தின் தலைவர் சஞ்சய் ஹேரதினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு விசேட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், எமது நாட்டில் சிறு தோட்ட உரிமையாளர்கள் அதிகளவில் உள்ளனர், அவர்கள் மூலம் தோட்டத் தொழில்துறையை எவ்வாறு விவசாய வர்த்தகமாக மாற்றுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

 நாங்கள் தேயிலையை மட்டும் பயிரிடுகிறோமா அல்லது உங்கள் பகுதிகளில் ஸ்மார்ட் விவசாயத்திற்கு இடமளிக்கிறோமா என்று தீர்மானிக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் விவசாய வர்த்தகத்தின் வளர்ச்சிக்காக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காணிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம். அதைப் பற்றி கண்டறிய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

 எமது சில நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தேயிலை தொழிலில் இலங்கை முன்னணியில் இருக்கும் வரை அரசாங்கத்திற்கு பிரச்சினை இல்லை. அதனை நாம் முன்னேற வேண்டும். தேயிலை சந்தையில் இலங்கை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றார்.