மன்னார் சம்பவமும் மருத்துவர் அர்ச்சுனாவின் ஏழுபேர் கொண்ட நண்பர்கள் அணியும்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
மன்னார் சம்பவமும் மருத்துவர் அர்ச்சுனாவின் ஏழுபேர் கொண்ட  நண்பர்கள் அணியும்!

மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா நண்பர்கள் அணி' (நண்பர்கள் அணி) சென்ற ஓகஸ்ற் மூன்று, ஐந்து மற்றும் ஏழாம் திகதிகளில் அர்ச்சுனா சார்பில் மன்னார் நீதிமன்றில் முன்னிலையான சட்டவாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது.
 
அவ்வகையில், பின்வரும் சட்டவாளர்கள் (Attorney at Law) மிகுந்த நன்றியுடன் பெயரிடப்படவேண்டியவர்கள்:
அன்ரன் புனிதநாயகம்
றெஜி றோய்ஸ் குரூஸ்
ஜெகநாதன் தற்பரன்
தர்மராஜா வினோதன்
கணபதிப்பிள்ளை கணேஸ்வரன்
அல்வின் கமல்ராஜ்
புராதனி சிவலிங்கம்
சுதர்சனா ஜெயசீலன்
செல்வராஜ் டினேசன்
சுலோக்சினி நாகராஜா
அன்ரனி மடுத்தீன்
அப்துல்ஹுதா பாத்திமா சப்னா
டிலக்சினி றொபின்
போல் ரிறோன்
கௌசல்யா நரேந்திரன்
 
இவர்களுக்கு ஆதரவாகத் தோள்கொடுத்த மற்றைய சட்டவாளர்களுக்கும் நன்றி.
அர்ச்சுனாவின் மன்னார் சட்டத் தேவைகள் குறித்துக் கரிசனையுடன் முயற்சிகளை எடுத்த அஜித், சுசி, கிரி, ஜெராட், இளவேனில், செலஸ்ரின் ஆகியோருக்கு நன்றி. சாவகச்சேரியிலிருந்து சட்ட ஆதரவை வழங்க முயற்சித்த அர்ச்சுனா அபிமானிகளையும் நண்பர்கள் அணி அறியும். அவர்களுக்கும் நன்றி... எனப் பதிவிடப்பட்டுள்ளது. 
 
மன்னார் சம்பவம் 
 
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மன்னார் மருத்துவமனைக்கு அர்ச்சுனா போன நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சனிக்கிழமை காலையில் அவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டதாகத் தகவல் வருகிறது. அஃது ஒரு பொதுவான உரையாடலாக இருக்கும் என்ற நம்பிக்கை தான் எல்லோரிடமும்!
 
ஆனாலும் அர்ச்சுனா கைது செய்யப்படுவதான செய்திவருகிறது. அவசர அவசரமாக அவருக்கு ஆதரவு தரும் நடவடிக்கைகள் நண்பர்கள் அணியினால் முடுக்கி விடப்படுகின்றன. சாவகச்சேரி அபிமானிகள் சிலரும் இயங்குகிறார்கள். சட்டவாளர்கள் மடுத்தீன், சுதர்சனா மற்றும் டினேசன் ஆகியோர் நீதிமன்றுக்கும் நீதிபதியின் வதிவிடத்துக்கும் விரைகிறார்கள். சனியன்றே அர்ச்சுனாவை வெளியே வைத்திருக்கும் முன்நகர்வு முயற்சி செய்யப்பட்டாலும், அவரை விளக்கமறியலில் வைக்கும் முடிவு தெரியவருகிறது.
 
சனி முன்னிரவில் நண்பர்கள் அணி மன்னார் சட்டவாளர் மூலமாக வவுனியாவில் இருக்கும் சட்டவாளர் புனிதநாயகத்தைத் தொடர்புகொள்கிறது. ஒரு குடும்ப நிகழ்வில் இருந்த போதிலும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் திங்களன்று பிணை முன்நகர்வுக்கான முயற்சியை எடுக்கலாம் என்று தீர்மானிக்கிறார்.
 
திங்கள் பகல் இந்த முன்நகர்வு மன்னார் நீதிமன்றத்தாற் கருத்தில் கொள்ளப்படுகிறபோது அர்ச்சுனா சார்பில் ஆறு சட்டவாளர்கள் (புனிதநாயகம், மடுத்தீன், சுதர்சனா, டினேசன், சுலோக்சினி, புராதனி) முன்வருகிறார்கள். ஆனால், ஆச்சரியப்படும் வகையில் பெருந்தொகையான சட்டவாளர்கள் பிணை விண்ணப்பத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அர்ச்சுனா மேலும் இரண்டு நாட்களுக்குக் காத்திருக்கவேண்டிய நிலை வருகிறது.
 
புதன் கிழமையன்று சட்டவாளர் புனிதநாயகம் தலைமையில் அர்ச்சுனா சார்பிலான பதினைந்து சட்டவாளர்கள் நீதிமன்றுக்கு வருகிறார்கள். மன்னார் மட்டுமன்றி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் என்று வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து அவர்கள் வருகிறார்கள். மற்றைய தரப்பில் ஆறு சட்டவாளர்கள் பிணைக்கு எதிராக வாதாடுகிறார்கள். மருத்துவமனைக்குள் வந்து மரணித்த ஓர் இளம் தாய்க்கு வன்முறை இல்லாத வகையில் நீதி கேட்டமைக்காக ஒருவருக்குப் பிணை மறுப்பார்களா என்று வழக்கைப் பார்க்க வந்த பொதுமக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
 
புதனன்று பிற்பகலில் இறுக்கமான முன்நிபந்தனைகளோடு அர்ச்சுனாவுக்குப் பிணை தரப்படுகிறது. வெளியே வரும் அர்ச்சுனாவுக்காக நீதிமன்றுக்கு வெளியே மக்கள் பொறுமையாகக் காத்திருக்கிறார்கள். ஆனாலும் நீதிமன்றின் அமைதியைக் காக்கும் நோக்கிலும் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கிலும் சட்டவாளர்கள் அர்ச்சுனாவைப் பின்பக்கத்தால் நீதிமன்ற வளவுக்கு வெளியே கொண்டுபோகிறார்கள். இருந்தாலும், அர்ச்சுனா போய்விட்டார் என்பதை அறிந்து ஏமாற்றம் கொண்ட மக்களின் உணர்வை அறிந்து அர்ச்சுனா மன்னார் விளையாட்டரங்குக்கு அழைத்துவரப்படுகிறார்.
தங்களுக்காகக் குரல் கொடுத்த அர்ச்சுனாவுக்கு நன்றி கூற அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அர்ச்சுனாவின் மனதில் மன்னார் மக்கள் ஆழமாகப் பதிந்து போகிறார்கள்!
 
குறிப்பு: 'மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா நண்பர்கள் அணி' என்பது உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து அவருடன் தனிப்பட்ட தொடர்பிலுள்ள ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4