பொது வேட்பாளரை பலப்படுத்துவதே தமிழர்களின் ஒரேயொரு வழி: யாழ். பல்கலைக்கழக சமூகம்

#SriLanka #Election #Tamil People
Mayoorikka
1 day ago
பொது வேட்பாளரை பலப்படுத்துவதே தமிழர்களின் ஒரேயொரு வழி: யாழ். பல்கலைக்கழக சமூகம்

தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழி என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். 

 தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் தேசமாக பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து எழுச்சியடைவதிலிருந்தும் சிங்கள - பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்துள்ளது.

 இந்நிலையில், தமிழ் மக்கள் சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக பிரிந்து நிற்பதுடன் தமிழ் மக்களையும் தமிழ் அரசியற்கட்சிகளையும் உதிரிகளாக்கி எங்களின் கூட்டு - மனவலுவைத் தகர்த்தெறிவதில் சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனக்கச்சிதமாக செய்து முடித்துள்ளன.

 இவ்வாறான சூழ்நிலைகளில் தமிழ் அரசியல் தரப்புக்கள் ஏற்ற உத்தரவாதங்களோ வாக்குறுதிகளோ இன்றி சிங்கள வேட்பாளர்களிடம் தமிழ் மக்களின் அரசியல் வாக்குகளை அடகு வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதனை பல்கலைக்கழகச் சமூகத்தினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

 இவ்வாறானதொரு சூழலில் தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழியென்றும், 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தினுள்ளும், “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பின் உள்ளும் தமிழ் மக்களின் அரசியலை சுருக்குவதில் சிங்கள தலைமைகளிற்கு விலைபோன தமிழ் அரசியல்வாதிகள் முயன்று வருவதையும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்த செயற்பாடுகளினையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகச் சமூகத்தினர் குறிப்பிட்டிருந்தனர்.