புலமை பரிசில் வினாக்கள் கசிந்த விவகாரம் - குற்றவாளிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

#SriLanka #sri lanka tamil news
Dhushanthini K
2 hours ago
புலமை பரிசில் வினாக்கள் கசிந்த விவகாரம் - குற்றவாளிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

 குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (23.09) கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 அண்மையில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளின் 3 வினாக்கள் மாதிரித் தாளில் ஆசிரியர் ஒருவரால் சேர்க்கப்பட்டு பரீட்சைக்கு முந்தினம் வாட்ஸ் அப் ஊடாக வெளியிடப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் அங்கம் வகித்த குறித்த மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் மற்றும் செயற்பாடுகள் பணிப்பாளர் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் இரகசிய தகவல்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 குருநாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.