பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன! ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
1 year ago
பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன! ஜனாதிபதி

புதிய அரசாங்கத்திற்கு பலமான அதிகாரத்தை வழங்காமல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் சில அரசியல்வாதிகளும் ஊடக நிறுவனங்களும் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், சில அரசியல்வாதிகள் அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாகவும், சில ஊடக நிறுவனங்கள் சமூகத்தில் அராஜகத்தை ஏற்படுத்தும் வகையில் முக்கிய பொருளாதார துறைகளில் தவறான செய்திகளை பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

 "சில நிறுவனங்களில் மட்டுமே அதிகாரத்தை உறுதி செய்துள்ளோம். ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் போன்ற பல நிறுவனங்களில் பலமான அதிகாரம் உறுதி செய்யப்படும்போது அரசியல் அதிகாரம் நிலைநாட்டப்படுகிறது. எங்களிடம் ஜனாதிபதி பதவியும் சிறிய அமைச்சரவையும் மட்டுமே உள்ளது. 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சியை கைப்பற்றி 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில், சில ஊடகங்களும், சில அரசியல்வாதிகளும் பலமான அதிகாரத்தை வழங்காமல் ஸ்திரமின்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

 சுற்றுலாத் தலங்களில் நடாத்தப்படக்கூடிய தாக்குதல் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் உளவுத்துறை அறிக்கையை வழங்கியதாகவும், தாக்குதல்களை நடத்த சில நபர்களுக்கு 5 மில்லியன் ரூபாய் வழங்குவதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகளை அவர் நிராகரித்தார். அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக சில அரசியல்வாதிகள் கூறுவதாக தெரிவித்த ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும் ஆதரவளித்த அரச ஊழியர்களுக்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

 “அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டாலும் அல்லது நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், முதல் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம்,” என்று அவர் கூறினார். சில ஊடக நிறுவனங்கள் பழைய ஒழுக்கக்கேடான நடைமுறைகளில் சிக்கித் தவிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இதழியலில் புதிய ஜனநாயக அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

 நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு ஊடக நிறுவனங்கள் முக்கியமானவை எனத் தெரிவித்த அவர், ஊடக நிறுவனங்கள் பொறுப்பான அறிக்கையிடல் நடைமுறையை ஏற்றுக்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4