இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம்: கஜேந்திரகுமார் உறுதி

#SriLanka #Gajendrakumar Ponnambalam
Mayoorikka
1 year ago
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம்: கஜேந்திரகுமார் உறுதி

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்குரிய அழுத்தங்களையும் வேறு சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய அரங்குகளுக்கு இலங்கையை கொண்டு செல்வதற்குரிய எங்களுடைய பயணம் இன்னும் தீவிரம் அடையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் .

 இன்றையதினம் (19) பிற்பகல் முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

 எதிர்வரும் 5 வருடங்களுக்குள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆழமாக சிந்தித்து தமிழ் தேசத்தினுடைய இன அழிப்பினுடைய, அடையாளமாக இருக்கக்கூடிய முள்ளிவாய்க்கால் மண்ணிலே எங்களுடைய உரிமை பயணத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சத்திய பிரமாணம் எடுக்கின்ற நோக்கத்தோடு முள்ளிவாய்க்காலுக்கு வந்திருக்கின்றோம்.

 இன்று தென்னிலங்கையிலே ஒரு மாற்றம் நடைபெற்று இருக்கின்ற சூழலில் விசேடமாக வடகிழக்கிலே அதிலும் யாழ்ப்பாணத்திலே தென் இலங்கையிலே நடைபெற்ற மாற்றத்தை போன்று யாழ்ப்பாணத்திலே ஒரு மாற்றம் நடைபெற்றதாக கூறி இன்று தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற கருத்தை கூட கூறுகின்ற அளவிற்கு தென்னிலங்கையிலே இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் புரிந்திருக்கிறார்கள் ஆகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த சத்தியப் பிரமாணத்தை எடுக்கின்ற போது எங்களது முக முக்கியமான நோக்கமாக இருக்கின்றது. 

ஒற்றை ஆட்சியை நிராகரித்து எமது மக்களை அரசியல் மயமாக்கி ஆட்சியை ஏற்றுக் கொண்டதாக காட்ட விரும்புகின்ற அந்த முயற்சியை மிகப்பெரியளவிலே தோற்கடித்து தமிழ் மக்களுடைய உண்மையான தேசபற்றுடைய தேசப்பற்றிலே அங்கிகாரத்திற்குரிய தமிழ் தேசத்துடைய இருப்பை உறுதிப்படுத்தக் கூடிய தேச அங்கீகாரத்துடன் சுயநிர்ணய சமஸ்டி தீர்வை மட்டுமே நாங்கள் நகர முடியும் என்ற செய்தியை உலகத்துக்கு காட்டக்கூடிய வகையிலே எங்களது இயக்கம் மிக தீவிரமான வகையில் இனிவரும் காலங்களிலே எமது இயங்கும் என்பதே எமது நோக்கமாக இருக்கிறது.

 கடந்த 15 வருடமாக எங்களுடைய கொள்கைகளையும், மக்களுடைய அபிலாசைகளையும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்திருக்கின்றோம். நாங்கள் மக்களோடு தோளுக்கு தோள் நின்று அவர்களுடைய அன்றாட பிரச்சினைகளாக இருக்கலாம், அவர்களுக்கு இருக்கக்கூடிய அடக்கு முறையாக இருக்கலாம் அனைத்துக்கும் எதிராக அவர்களுடன்.

 போராடி இருக்கின்றோம் அதனையும் தாண்டி இன்று இருக்கக்கூடிய ஆபத்துக்களை உணர்ந்து எமது இயக்கத்தினுடைய செயற்பாடுகள் இதுவரைக்கும் காணாத அளவிற்கு நாங்கள் பலப்படுத்த வேண்டும். நமது முயற்சிகளை மூன்று, நான்கு மடங்காக பெருப்பிக்க வேண்டும் அதைச் செய்வதன் ஊடாக மட்டுமே நாங்கள் தெற்கிலே இருக்கக்கூடிய இனவாத சக்திகளுடைய இந்த நோக்கத்தினை தோற்கடிக்க கூடியதாக இருக்கும்.

 அந்த வகையிலே இந்த வாக்குறுதியை அரசியல் இயக்கத்துடைய அனைத்து உறுப்பினர்களும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு முன்பாக சத்திய பிரமாணம் எடுத்திருக்கின்றோம். அந்தக் கடமையை மாவீரர்களும், எமது பொதுமக்களும் உயிர்த்தியாகம் செய்தமை வீண் போகாமல் இருப்பதற்கு நாங்கள் நிச்சயம் செய்து முடிப்போம். அத்தோடு கடந்த 15 வருடங்களாக எமது அரசியல் இயக்கம் முள்ளிவாய்க்காலில் நிறைவேறிய தமிழின படுகொலைக்கு, ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை உறுதியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம். 

ஐநா மனித உரிமை பேரவையிலேயே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடைய பலவீனங்களை நாங்கள் மக்களுக்கும் சர்வதேச மட்டத்திலும் எடுத்துக்காட்டி இருக்கின்றோம். அதனுடைய இயலாமையை நாங்கள் கடந்த 15 வருடங்களாக அனுபவித்து வந்திருக்கின்றோம்.

 இதுவரைக்கும் தமிழ் மக்களுடைய இனப்படுகொலைக்குரிய குற்றவியல் விசாரணைகள் எதுவும் நடைபெறாமல் இலங்கை அரசாங்கத்துக்கும் தன்னுடைய இராணுவத்திற்கும், முப்படைகளுக்கும் ஒரு கால அவகாசத்தினை தான் 15 வருடங்கள் அமைந்திருந்தது.

 அந்தவகையிலேயே நாங்கள் தொடர்ந்து எங்களுடைய மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அதே சமயம் மக்களுடைய முழு பலத்தையும் அணிதிரட்டி ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணையை நடத்துவதற்கு விஷேடமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்குரிய அழுத்தங்களையும் வேறு சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய அரங்குகளுக்கு இலங்கையை கொண்டு செல்வதற்குரிய எங்களுடைய பயணம் இன்னும் தீவிரம் அடையும் என மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4