மீன் பிரியாணி - செய்முறை விளக்கம்!

தேவையானவை:
வஞ்சிர மீன் - 4 துண்டு,
பாசுமதி அரிசி - இரண்டரை கப்,
பழுத்த தக்காளி - 4,
பெரிய வெங்காயம் - 3,
கரம்மசாலா தூள் - ஒரு டீஸ்பூன்,
தயிர் - அரை கப்,
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி,
எண்ணெய் - அரை கப்,
நெய் - கால் கப்,
உப்பு - 2 டீஸ்பூன்,
இஞ்சி + பூண்டு + பட்டை விழுது - 4 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - சிறிது.
செய்முறை: பிரியாணி அரிசியை கழுவி ஊறவையுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீளநீளமாக வெட்டி வையுங்கள். மீன் துண்டுகளில் உப்பு, மிளகாய்தூள், கரம்மசாலா தடவி எண்ணெயில் பொரித்தெடுங்கள். பிறகு மீனை ஆறவிட்டு முள், தோலை நீக்கிவிட்டு சிறு, சிறு துண்டாக நறுக்கிவையுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு, பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கள். இது நன்றாக வதங்கிய பிறகு, நெய் விட்டு புதினாவையும் போட்டு, மீண்டும் வதக்குங்கள்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி, தயிர், தக்காளி, மிளகாய்தூள், உப்பு போட்டு நன்றாக வதக்குங்கள். பிறகு வென்னீர் 2 டம்ளர் விட்டு, கொதித்ததும் அரிசி போட்டு கிளறி மூடிவையுங்கள். தண்ணீர் வற்றி, சாதம் சேர்ந்தாற்போல வரும்போது மீனை போட்டு நன்றாக கிளறி மூடிபோட்டு, ‘தம்’ போடுங்கள். இப்போது சுவையான மீன் பிரியாணி தயார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



