தென்னிலங்கையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பட்டலந்த அறிக்கை என்றால் என்ன?

#SriLanka #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
தென்னிலங்கையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பட்டலந்த அறிக்கை என்றால் என்ன?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கப்பட்ட நேர்காணல் மற்றும் அதில் சர்ச்சைக்குள்ளான பட்டலந்த விவகாரமும் தற்போது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

 இந்நிலையில் பட்டலந்த விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பட்டலந்த விடயம் பொறுப்புக்கூறலுக்குட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் தற்போது பரவலாக எழுந்துள்ளன.

 அதேவேளை, பட்டலந்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் காணப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளார் என்பது தெரியும் இது அனைவருக்கும் தெரிந்த உண்மை குற்றச்சாட்டுகளை எங்களால் நிராகரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

 பட்டலந்த அறிக்கை என்றால் என்ன? 

 ஐக்கிய தேசிய கட்சியின் 17 வருட ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றார்.

 1988 மற்றும் 1990 களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நியாயத்தை நிலைநாட்டுவதாக அவர் தேர்தல் மேடைகளில் வாக்குறுதி அளித்தார். 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி பிறப்பித்த உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவே பட்டலந்த விசாரணை ஆணைக்குழு என அழைக்கப்படுகிறது.

 அரச உர உற்பத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பியகம பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்தமை அல்லது காணாமலாக்கியமை தொடர்பில் விசாரணை நடத்தி பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் கண்டு பரிந்துரை செய்வதே இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாகும். அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.ஜயவிக்கிரம தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் உறுப்பினராக மேல் நீதிமன்ற நீதிபதி என்.ஈ.திசாநாயக்க செயற்பட்டார்.

 இந்த விசாரணைகுழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டதுடன் சட்ட மாஅதிபர் திணைக்களம் சாட்சிகளை வழிநடத்தியது. தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசரும் அப்போதைய அரசதரப்பு சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட மற்றும் தற்போதைய ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன ஆகியோரை சட்ட மாஅதிபர் திணைக்களம் இதற்காக நியமித்திருந்தது.

 ஆணைக்குழுவின் காலம் 12 சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டதுடன் 1998 மார்ச் 26ஆம் திகதி ஆணைக்குழுவின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கையளிக்கப்பட்டது. பட்டலந்த ஆணைக்குழு மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான தொடர்பு என்ன? குறித்த காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்தார். பட்டலந்த வீடமைப்புத்தொகுதி அந்த சந்தர்ப்பத்தில் கைத்தொழில் அமைச்சுக்கு சொந்தமாகவிருந்தது.

 ஆணைக்குழுவில் வௌிக்கொணரப்பட்ட சாட்சியங்கள் மூலம் A2/2, A2/1, A2/3, A1/7, B2, B1 , B7 ஆகிய வீடுகளை ரணில் விக்கிரமசிங்கவே பயன்படுத்தியிருந்தார். பேலியகொடை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி டக்ளஸ் பீரிஸ் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கும் இந்த வீட்டுத்திட்டத்தின் வீடுகள் வழங்கப்பட்டிருந்தமையும் ஆணைக்குழுவின் அறிக்கையில் வௌிக்கொணரப்பட்டது. களனி நாசகார செயல் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகளுக்கும் இங்கு 13 வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதிலுள்ள ஒரு வீடு ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஏனைய வீடுகளை வழங்கும்போது ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டமையும் அறிக்கையில் வௌியானது. பட்டலந்த ஆணைக்குழுவிற்கு ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து விசாரணை நடத்தவும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது. சுமார் 3 வருடங்களாக சாட்சியங்களை சேகரித்த பட்டலந்த ஆணைக்குழு இறுதி அறிக்கையில் சில பரிந்துரைகளை முன்வைத்தது. இந்த வதை முகாமுடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மனித உரிமைகளை பாரதூரமான முறையில் மீறியுள்ளதால் அவர்களது பிரஜாவுரிமையை பறிப்பதற்கு தேவையான மேலதிக அதிகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு வழங்குமாறு ஆணைக்குழு முக்கிய பரிந்துரையை முன்வைத்தது.

 நிறைவேற்றதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்ற அச்சம் இல்லாததால் மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. பட்டலந்த ஆணைக்குழு அறிக்கைக்கு என்ன நடந்தது? அறிக்கை அப்போதைய ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டாலும் அதிலிருந்த பரிந்துரைகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

 தேர்தல் மேடைகளில் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை ஒரு தலைப்பாக மாறினாலும் நீதியை நிலைநாட்டுவதற்காக அது முன்வைக்கப்படவில்லை. பிபிசி செய்தியாளர் பிரான்ஸஸ் ஹெரிசன் அல் ஜசீரா நிகழ்ச்சியின் போது இந்த அறிக்கையை காண்பித்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு சவால் விடுத்தார். அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய இந்த அறிக்கை அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 அதேவேளை பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ள நிலையில், அமைச்சரவையில் இதுதொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1741548940.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4