தமிழரசுக் கட்சியை சிதைக்க சதி! சீ.வீ.கே. சிவஞானம் ஆதங்கம்

#SriLanka
Mayoorikka
1 year ago
தமிழரசுக் கட்சியை சிதைக்க சதி! சீ.வீ.கே. சிவஞானம் ஆதங்கம்

தமிழரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகிறது. அதிலும் தமிழரசுக் கட்சியை எப்படியாது சிதைத்து அதை உடைத்து கட்சியை பிளவு படுத்தி விட வேண்டும் என சிலர் செயற்படுகின்றனர். என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

 யாழில் உள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை (13) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

 புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகிறது. உண்மையில் அப்படி கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை. அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தொடர்பில் பேசியிருந்த போது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர்.

 குறிப்பாக தமிழ் மக்களின் நீண்ட கால பாரம்பரிய கட்சியாக இருக்கிறது. இந்த தமிழரசுக் கட்சியை எப்படியாவது உடைத்து விட வேண்டும் என்ற விசமத்தனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

 தமிழரசுக் கட்சியை பொறுத்த வரையில் கடந்த 75 வருடகால வரலாற்றில் சோரம் போகாத ஊழலில் ஈடுபடாத தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாக இந்தக் கட்சியே திகழ்ந்து வருகிறது. இத்தகைய கட்சியை உடைக்க பலரும் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்திருந்தாலும் இது பலனளிக்காத நிலைமை ஏற்பட்டு உள்ளது. இவ்வாறான நிலையில் ஜனநாயக தமிழரசு என்றும் புதிய தமிழரசு என்றும் புதிய புதிய பெயர்களைச் சொல்லிக் கொள்கின்றனர். 

அவ்வாறாக தமிழரசு கட்சியை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல்லும் தேவைப்படுவது ஆச்சர்யமானது. ஆக மொத்தத்தில் தமிழரசை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. ஆனால் தெற்கத்தேயே சிங்கள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உடைக்கும் முயற்சியை தொடர்ந்து செய்தாலும் இது பலனளிக்காது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன். மேலும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராக நானும் பதில் செயலாளராக சுமந்திரனும் பதவிக்கு வருவதற்கு புதிதாக ஒன்றும் செய்யவில்லை.

 யாப்பில் குளறுபடி செய்து இந்தப் பதவிகளுக்கு வரவில்லை. எமது கட்சியின் யாப்பிற்கு அமையதான் இப்போது அந்தப் பதவிகளை எடுத்திருக்கிறோம். இவ்வாறான நிலைமைகள் இருக்கத்தக்கதாக மக்கள் மத்தியில் பிழையான தகவல்களை பரப்பி விசமத்தனமான பிரச்சாரங்களை சிலர் மேற்கொள்கின்றனர். அதுவும் இப்போது தேர்தல் காலம் என்பதால் இன்னும் இன்னும் அதிகளவில் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். 

 எனவே தமிழரசை பிளவுபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரச்சாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழரசை இலக்கு வைத்து தமிழரசை உடைக்க முயற்சிகள் எடுத்தாலும் அதனூடாக விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நாம் முன்னேறுவோம்.

 மாற்றான சிந்தனையில் பொறுப்பான அணுகு முறையை பின்பற்றி அனேகமாக எல்லா இடங்களிலும் சபைகளை கைப்பற்றுவோம். ஆனால் ஆட்சி அமைக்க தேவைப்படும் இடங்களில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேசுவோம் என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1741870603.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4