இலங்கையில் உப்பு விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்!

#SriLanka #prices #Lanka4 #Salt #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 year ago
இலங்கையில் உப்பு விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்!

உப்பு விலை உயர்வினால் உணவுப் பொருட்களைப் பதப்படுத்த முடியவில்லை என உப உணவு பதனீட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த நவம்பர் மாதத்திற்குப் பின்னராக இருந்து இந்த நிலைமை நீடிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

 கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலேயே 60 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ கல் உப்பு சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக விலை அதிகரித்து தற்போது ஒரு கிலோ 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உப்பு விலையின் இந்த அசுர அதிகரிப்பினால் உப்பைக் கொண்டு பதனிடப்படும் உப உணவுகளை பதனிட முடியவில்லை என்று உணவு பதனிடுவோர் அங்கலாய்க்கின்றனர்.

 இதேவேளை, அதிக விலை கொடுத்து உப்பை வாங்கி உப்பைப் பிரதானமாகக் கொண்டு பதனிடப்படும் மோர் மிளகாய், ஊறுகாய், உப்புக் கருவாடு ஆகியவற்றை பதனிட முடியாததால் ஒரு புறத்தில் உப்புக் கருவாடு மோர் மிளகாய் ஊறுகாய் என்பனவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 மறுபுறத்தில் மிளகாய் கருவாடு தயாரிக்கப் பயன்படும் நெத்தலி, அய்யா மாசி, கூனி இறால், கட்டாப்பாரை போன்ற மீன்கள், தேசிப்பழம் என்பனவற்றை விற்பனை செய்ய முடியவில்லை என்று விவசாயிகளும் மீனவர்களும் தெரிவிக்கின்றனர்.

 இதன் காரணமாக மிளகாய் உற்பத்தி செய்யப்படும் சில பிரதேசங்களில் ஒரு கிலோகிராம் மிளகாய் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியாத நிலையுள்ளதாக அங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று கருவாட்டுக்காக சிறு மீன்களைப் பிடிப்போரும் உப்புக் கருவாடு தயாரிக்க முடியவில்லை என்பதால் சில நேரங்களில் பிடிக்கப்படும் மீன்களை விற்க முடியாததால் அவற்றைக் குப்பையில் கொட்டவேண்டிய நிலை உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

 ஒட்டு மொத்தத்தில் உப்பு விலை உயர்வினால் விவசாயிகளும், மீனவர்களும், இல்லத்தரசிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இறக்குமதி செய்யப்பட்டுள்ள உப்புத் தொகை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டை வந்தடையும் என லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் ஹம்பாந்தோட்டை, ஆனையிறவு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உப்பு அறுவடைக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் இதன் காரணமாக கடந்த மார்ச் 15ஆம் திகதி முதல் உப்பு தட்டுப்பாடு நிலவியதாக அந்த நிறுவனத்தின் தலைவர் டி.நந்தனதிலக்க தெரிவித்தார்.

 இந்நிலையில், லங்கா உப்பு நிறுவனம் 10 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பையும், தேசிய உப்பு நிறுவனம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பையும் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினரான நிலுக் தில்ஹான், அரசாங்கத்தின் ஊடாக உப்பு இறக்குமதி இடம்பெறுவதால் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு தொகை நாட்டை வந்தடைவதில் சற்று தாமதம் நிலவுவதாகத் தெரிவித்தார்.

 இலங்கையில் ஒரு மாதத்திற்கு சுமார் 15 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு தேவைப்படுகிறது. எனினும் கடந்த ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்காக 30 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.

 எனவே, ஏப்ரல் மாதம் நிறைவடைந்து தற்போது மே மாதமாகியுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள உப்புத்தொகை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டிற்கு வந்தடையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் நிலுக் தில்ஹான் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1747175441.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4