ஈழத்தில் சாதனை பெண்ணாக மாறியுள்ள ஓவியர் கேசனா இராசரத்தினம்
ஈழத்தை பொறுத்தவரை தற்போது கலைத்துறையில்
எம்மவர்களின் வளர்ச்சி சடுதியாக வளர்ச்சி கண்டு வருகிறது. பல் துறைகளிலும்
எமது கலைஞர்கள் மிளிர்ந்து வருவது எம்மைப் பொறுத்தவரை பெருமையாகவே உள்ளது.
ஈழப்பரப்பையும்
தாண்டி இந்தியா மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் பெயர் சொல்லுமளவிற்கு
எமது கலைஞர்கள் வளர்ச்சி கண்டுள்ளனர்.அந்த வகையில் ஈழத்தில் தனது சொந்த
முயற்சியால் சாதித்து வெற்றிகண்டுள்ள கேசனா இராசரத்தினம் அவர்களைப்
பற்றித்தான் ஆராயவுள்ளோம்.
வவுனியா கூமாங்குளத்தை தனது வதிவிடமாக
கொண்ட கேசனா இராசரத்தினம், வேலுப்பிள்ளை இராசரத்தினம் மற்றும் யூட்ஸ்
ஜக்குலின் ஆகியோருக்கு புதல்வியாக பிறந்தவருக்கு ஐந்து சகோதரர்களும் உண்டு.
தனது
ஆரம்ப கல்வி தொட்டு உயர்தரம்வரை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் மிகச்
சிறப்பாக கற்றவர், தற்போது ஈழத்தில் சிறந்த ஓவியராக தன்னை
மாற்றிக்கொண்டுள்ளார்.
சிறுவயதில் பாடசாலையில் வழங்கப்படும் சித்திர
வேலைகள் மற்றும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் பொருட்களை கேசனாவின்
தந்தையாரே செய்து கொடுப்பது வழக்கமாகியதால், அவற்றை அருகிருந்து
அவதானித்ததன் விளைவாகவே ஓவியத்தின் மீதான ஆர்வம் கேசனாவிற்கு வந்ததென்றெ
கூறலாம்.
காலமும் கேசனாவை விட்டுவிடாமல் தன் கைபிடியில் அழைத்துச்
செல்ல சற்று வளர்ந்தவள், தனது ஓய்வு நேரங்களை வீணாக்கிவிடாது சாதித்துவிட
வேண்டுமென்ற எண்ணத்தில் ஓவியங்கள் வரைவதை தனது பழக்கமாக்கி கொண்டதால்,
பாடசாலையிலும் தனது கைவரிசையை காட்ட, ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும்
பாராட்ட துள்ளிக்குதித்து தனக்குள்ளே புளகாந்திதமடைந்த கேசனாவிற்கு,
இவ்வாறான பாராட்டுகள் மேலும் தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை
வலுவாக்கியது.
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும்" என்ற திருக்குறளுக்கு அமைவாக, தனது சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதில் கேசனா அலாதிப்பிரியம் கொண்டிருந்தாலும் சித்திரத்தை ஒரு பாடமாக கற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை. இருந்தும் பலர் வியந்து பேசுமளவிற்கு தான் வரையும் ஓவியங்களுக்கு உயிரூட்டியுள்ளார்.
இப்படியாக தனது சிறு வயதிலேயே பல பாராட்டுக்களை பெற்று வந்த கேசனாவின் வாழ்வில் அப்போது பெரும் துயரம் சூழும் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கேசனாவின் வளர்ச்சியில் முதுகெலும்பாக அருகிருந்து தட்டிக்கொடுத்த தந்தை 2008ம் ஆண்டு
உயிரிழந்தார். பிஞ்சு வயதில் ஏற்படகூடாத துயரம் கேசனாவின் வாழ்வில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியதுடன் வாழ்வின் பயணங்களில் பல கேள்விகளையும் எழுப்பியிருந்தது.
குடும்பத் தலைவனை இழந்ததால் குடும்பத்தை தாங்க வேண்டிய முழுமையான பொறுப்பும் கேசனாவின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டதால், கிடைக்கும் வேலைகளுக்குச் சென்று அதில் கிடைக்கும் பணத்தில் தனது ஆறு பிள்ளைகளையும் வளர்த்து வந்தார்.
இவ்வளவு துயரங்களையும் கடந்த நிலையில் கேசனாவும் பல்கலைக்கழகம் செல்லும் நிலைக்கு உயர்ந்துவிட்டார். அத்தோடு அவரது சகோதரி ஒருவரும் பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்து வவுனியா பிரதேச செயலகத்தில் அரச உத்தியோகத்தராக பணியாற்றிவருகிறார்.
கேசனா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டத்தை நிறைவு செய்து வெளியேறிய நிலையில், சித்திரம் கற்றவர்களிடம் முறையாக சித்திரத்தை கற்க முயற்சித்தும் அது கைகூடாத நிலையில், தானே சுயமாக சமூக ஊடகங்களின் துணையோடு மேலதிகமாக கற்றுக்கொண்டார்.
இவை இவ்வாறு இருக்க, தான் கற்றுக்கொண்ட கலையை தொடர்ச்சியாக கேசனா பின்பற்றிவருகிறார். பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்த கேசனா தனது வருமானத்திற்காக வவுனியா வைரவபுளியங்குளத்திலுள்ள Ganesha stationary & fancyயில் பணி புரிந்த சந்தர்ப்பத்தில் இவரது திறமையை அறிந்துகொண்ட கடை உரிமையாளர் புவி அவர்கள், கேசனா வரைந்த ஓவியங்களின் மாதிரியை தனது கடையில் காட்சிப்படுத்தி ஓவியங்கள் வரைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அது மட்டுமன்றி கேசனாவின் முகநூல் நண்பர் ஒருவர் தனது முகநூலிலும் இவரது ஓவியங்களை பதிவேற்றியதால், அதிகளவான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பின்னரே தனது ஓவிய கலையை தொழில் ரீதியாக கேசனா மாற்றியமைத்தார்.
இவ்வாறு தொடர்ச்சியாக தனது திறமைகளை வெளிகாட்டி வரும்போது பலரால் மன உளச்சல்களுக்கும் ஆளாகியுள்ளார். ஓவியத்தின் தரத்தை உணராது அதற்கான கொடுப்பனவு தொடர்பாக பலர் வாதங்களையும் எழுப்புவதாலேயே இவ்வாறான மனவருத்தத்தை சந்தித்துள்ளார்.
கணினியின் உதவியோடு வரையப்படும் ஓவியங்களுக்கும் கையால் வரையப்படும் ஓவியங்களுக்குமிடையிலுள்ள வேறுபாடுகளை மக்கள் உணராததால், கையால் வரையும் ஓவியங்களின் உயிரோட்டத்தை யாரும் எளிதில் கண்டுகொள்வதில்லை.
இவ்வாறான சவால்களை தொடர்ச்சியாக சந்தித்து கொண்டிருக்கையில் 2020ம் ஆண்டு அரச சேவையில் இணைந்து கிராம சேவையாளர் அலுவலகம், பிரதேச செயலகம் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் போன்றவற்றில் தனது பயிற்சி காலத்தை நிறைவு செய்தார்.
குறித்த திணைக்களங்களும் இவரது ஓவிய துறைக்கு தம்மால் முடிந்த பேராதரவை வழங்கியுள்ளனர்.
தற்போது மூன்று வருடமாக வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபையில் கடமையாற்றிக்கொண்டிருப்பதால், அதிகளவான நேரம் பயணத்தில் முடிவடைவதால், பயண களைப்பின் மிகுதியால் ஓவியங்களை தொடர்ச்சியாக வரைய முடியாததால் விடுமுறை பெற்று ஓவியங்களை வரைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
தனது பணியிடம் அண்மையில் இருந்தால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்ட முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இத் துறையில் தான் மென்மெலும் சாதனைகள் படைக்க வேண்டுமென்ற கனவுகள் இருப்பதால், தனது முயற்சிகளைக் கைவிடாது சாதித்து வெற்றி காண்பேன் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.
ஈழப் பரப்பில் பெண் ஓவியராக பல இன்னல்களையும் சவால்களையும் முறியடித்து தனது அசாத்திய திறமையால் பலரது மனங்களை கவரும் வகையில் உயிரோட்மான ஓவியங்களை வரையும் கேசனாவிற்கு, எங்கள் தாய் தமிழ் உறவுகள் கரம் கொடுப்பீர்கள் என்ற பெரு நம்பிக்கையுள்ளது.
உங்கள் விருப்புக்குரியவர்களின் முக சாயலுக்கு ஒப்பான ஓவியங்களை வரைந்து பரிசளிக்க இவரை நேரடியாக தொடர்புகொண்டு பெற்றுகொள்ள முடியும்.
ஈழத்து கலைஞர்களாலும் சாதிக்க முடியும் என்ற பெரும் செய்தியை உலகுக்கு உணர்த்த, அத்தனை தமிழ் பேசும் உள்ளங்களும் முன்வந்து கேசனாவின் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும்.
தொடர்புகளுக்கு 👇👇👇
Sana Arts
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை