மூன்றாம் ஊலகப் போரை நோக்கிச் செல்கிறதா யேர்மனி?

#world_news #War #Lanka4 #Trump
Mayoorikka
1 day ago
மூன்றாம் ஊலகப் போரை நோக்கிச் செல்கிறதா யேர்மனி?

நவீன உலகம் இதுவரை இரண்டு உலகப் போர்களைப் பார்த்து விட்டது. இந்த இரண்டு உலகப் போர்களின் மையமும் ஐரோப்பக் கண்டமே. உலகிற்கே நாகரிகத்தைப் போதிப்பவர்கள் நாங்களே, மனித உரிமைகளின் காவலர்களும் நாங்களே என மார்தட்டும் ஐரோப்பிய நாடுகளில்தான் இந்த இரண்டு உலகப் போர்களும் உருவாகி நாசத்தை விளைவித்தன.

 பெறுமதியான மனித உயிர்களைப் பலிகொண்டன. நாடுகளின் எல்லைகளை மாற்றியமைத்தன. வெற்றி பெற்ற நாடுகள் ஏனைய நாடுகளைக் கொள்ளையிட்டன. தோல்வியடைந்தன நாடுகள் வெற்றி பெற்ற நாடுகளுக்குக் கப்பம் கட்டி வாழ வேண்டிய சூழல் உருவானது. இந்த இரண்டு உலகப் போர்களையும் ஆரம்பித்து வைத்ததில் முக்கிய பங்கு யேர்மன் நாட்டுக்கே உரியது. இரண்டு போர்களிலும் பிரதானமாகக் குறிவைக்கப்பட்ட நாடாக ரஸ்யா இருந்தது. 

இரண்டாம் உலகப் போரின் போது மேனாள் சோவியத் ஒன்றியமான ரஸ்யா சந்தித்த இழப்புகள் சொல்லி மாளாதவை. உயிர் இழப்பு, சொத்து இழப்பு என அனைத்து இழப்புகளையும் தாங்கிக் கொண்டு தம்மிடம் இருந்த வளங்கள் யாவற்றையும் திரட்டிக் கொண்டு ஏனைய நாடுகளில் இருந்த தேசபக்தர்களையும் சேர்த்துக் கொண்டு புறப்பட்ட செஞ்சேனை இறுதியில் பேர்லினில் செங்கொடியைப் பறக்க விட்டமை வரலாறு. யேர்மன் ஆட்சியாளர்களின் அண்மைக்கால நடவடிக்கைகளை அவதானிக்கும் போது மூன்றாம் உலகப் போருக்கும் யேர்மனியே காரணமாகி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

 இரண்டாம் உலகப் போரில் தோல்விகண்ட யேர்மனி பல நிபந்தனைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. அதில் முக்கியமான ஒன்று படைக் கட்டுமானம் பற்றியது. குறிப்பிட்ட அளவுக்கு மேலே படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது. 

முக்கியமாக வெளிநாடுகளில் தங்கள் படைகளை நிறுத்தக் கூடாது என்ற நிபந்தனைகளை யேர்மன் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.

 இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 80 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. யேர்மனி மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்வு கண்டுவருவதைப் பார்க்க முடிகின்றது. ஆப்கானிஸ்தானில் மேற்குலகின் படைகள் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் யேர்மன் படையினரும் அங்கே நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் காண முடிந்தது. மட்டுப்படுத்தப்பட்ட அந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்தோடு நாடு திரும்பிவிட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை ஒரு பலமிக்க நாடாகக் கருதிச் செயற்படும் யேர்மனி, தனது அயல் நாடுகளில் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தனது படைகளை நிறுத்தி வைக்க ஆசைப்படுகின்றது.

 தற்போதைய அமெரிக்க நிர்வாகம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியில் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள தமது படையினரைத் திருப்பி அழைக்கப் போவதாக மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில் அதனால் ஏற்படக்கூடிய வெற்றிடத்தை நிரப்பும் ஆசையுடன் யேர்மனி உள்ளதை அதன் அண்மைக்காலச் செயற்பாடுகள் மூலம் பார்க்க முடிகின்றது. தற்போதைய புள்ளிவிபரங்களின்படி ஐரோப்பாவில் 84,000 வரையான அமெரிக்கப் படையினர் பல்வேறு நாடுகளில் கனரக ஆயுதங்கள் சகிதம் நிலைகொண்டுள்ளனர். யேர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், ருமெனியா, எஸ்தோனியா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலும் அமெரிக்கப் படையினர் உள்ளனர். 

தற்போதைய எண்ணிக்கையில் இருந்து ஆகக் குறைந்தது 10,000 வரையான படையினரை திரும்ப அழைத்துக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகத் தெரிகின்றது. பெரும்பாலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள படையினரையே வாபஸ் பெற அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதேவேளை, தனது திட்டத்தின் ஒரு அங்கமாக முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான லித்துவேனியாவில் தனது நிரந்தர படைத்தளம் ஒன்றை யேர்மனி அமைத்துள்ளது. 

தனது நாட்டுக்கு வெளியே யேர்மனி கொண்டுள்ள முதலாவது படைத்தளமாகவும் இது உள்ளது. 2029-2030ஆம் ஆண்டளவில் நேட்டோ நாடுகளின் மீது ரஸ்யா தாக்குதல் நடத்த உத்தேசித்துள்ளதாகக் கூறும் யேர்மனி அதனை எதிர்கொள்ளும் நோக்குடனேயே லித்துவேனியாவில் தனது படைத்தளத்தை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. யேர்மனியின் படைத்தளத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வில் யேர்மனியில் புதிய அதிபர் பிரடெரிக் மெயற்ஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்ரோறியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது படையினரின் அணிவகுப்புடன், யுத்த தாங்கிகள், ஏவுகணைகள், குண்டுவீச்சு விமானங்கள் என்பனவும் பங்கெடுத்துக் கொண்டன.

 ''சமாதானம், சுதந்திரம், பாதுகாப்பு என்பவையே தங்களின் நோக்கம்" என மெயற்ஸ் வெளிப்படையாக அறிவித்துக் கொண்டாலும் அடிமனதில் உள்ள எண்ணம் ரஸ்யா மீதான படையெடுப்பை ஆரம்பிக்கத் தேவையான தளத்தை அமைத்துக் கொள்ளுதல் என்பது சுலபமாகப் புரியும். தனது தாக்குதல் படையணியை லித்துவெனியாவில் நிறுத்தி வைக்க யேர்மன் எடுத்த முடிவு ஒன்றும் தற்செயல் அல்ல. ரஸ்யாவின் ஆட்சிக்கு உட்பட்ட கலினின்கிராட் பிரதேசத்துடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் லித்துவெனியா தனது தெற்கு மற்றும் கிழக்கு எல்லையாக ரஸ்யாவின் நட்பு நாடான பெலாரஸுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. 

அது மாத்திரமன்றி சற்றொப்ப 300 கிலோ மீற்றருக்கும் குறைவான தொலைவிலேயே ரஸ்ய எல்லையும் உள்ளது. ரஸ்யாவுக்கும் லித்துவெனியாவுக்கும் இடையிலான கடல் மார்க்கத் தொடர்பு 22 கடல் மைல் தொலைவே என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போரின் போது 1941 யூனில் யேர்மன் படைகள் லித்துவெனியாவைக் கைப்பற்றி இருந்தன. உள்ளூர் கூட்டாளிகளுடன் இணைந்து யேர்மன் படையினர் நிகழ்த்திய படுகொலைகளில் அந்த நாட்டில் வாழ்ந்த யூதர்களில் 95 வீதமானோர் ஒரு சில மாதங்களிலேயே கொல்லப்பட்டனர். 

யூதர்கள் மாத்திரமன்றி தொழிற்சங்கவாதிகள், கம்யூனிஸ்டுகள். எதிர்ப்பாளர்கள் என மேலும் பல ஆயிரக்கணக்கானோர் இந்தக் காலப்பகுதியில் பலிகொள்ளப்பட்டனர். தற்போது யேர்மனி தனது தாக்குதல் படையணியை லித்துவேனியாவில் நிறுத்தி வைத்துள்ள நிலையில் பழைய வரலாறு மீண்டும் திரும்புமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதேவேளை, தனது படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ள யேர்மனி அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. தற்போது 180,000 பேர் யேர்மன் படைகளில் உள்ளனர். 

2031ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 300,000 ஆக அதிகரிக்க யேர்மனி உத்தேசித்துள்ளது. தற்போதைய சட்டத்தின்படி சுய விருப்பத்தின் பேரில் மாத்திரமே யேர்மனியில் படைக்கு ஆட்கள் திரட்டப்பட்டு வருகின்றனர். முன்னர் நடைமுறையில் இருந்த கட்டாய ஆட்சேர்ப்பு என்ற நடைமுறை 2011ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது. தற்போது ஒரு கலப்பு முறையை நடைமுறைக்குக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டில் இத்தகைய கலப்பு முறையே நடைமுறையில் உள்ளது. அதில் விருப்பத் தேர்வும் கட்டாய நடைமுறையும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மறுபுறம் பாதுகாப்புத் துறைக்கான செலவினங்களை அதிகரிக்கவும் மெயற்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. படைத்துறையில் இருந்த அனுபவத்துடன் அரசியலுக்கு வந்து ஜனாதிபதியாக மாறியுள்ள முதலாவது நபராக உள்ள மெயற்ஸ் படைத்துறைக்கு அதிக நிதியை ஒதுக்க முயல்வதில் வியப்பேதும் இல்லை. தனது பதிவியேற்பு உரையில் ''ஐரோப்பாவின் மிகப் பலமான இராணுவமாக யேர்மன் இராணுவம் மாற்றியமைக்கப்படும்" என அவர் தெரிவித்திருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.

 யேர்மனியின் பாதுகாப்புச் செலவினம் தற்போதைக்கு ஆண்டொன்றுக்கு 53 பில்லியன் ஈரோவாக உள்ளது. இந்தத் தொகையை ஆண்டொன்றுக்கு 225 பில்லியன் ஈரோவாக அதிகரிப்பதற்கு யேர்மன் அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர் சமூக உதவிகளாலோ, கல்வியாலோ நாட்டைக் காப்பாற்ற முடியாது எனத் தெரிவித்துள்ளார். 

யாரிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுவது, யாருக்காக நாடு என்ற விடயங்கள் தொடர்பில் அவர் எதுவும் குறிப்பிடவில்லை. போர் என்று வந்துவிட்டால் அதில் லாபம் அடைபவர்கள் யார், நட்டம் அடைபவர்கள் யார் என்பதை சொந்த அனுபவத்தில் பார்த்தவர்கள் நாம். உலகமும் அதனைப் பல தடவைகளில் பார்த்துவிட்டது. இருந்தும் வரலாற்றில் இருந்தும் பாடம் கற்கத் தவறும், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தொடர்ந்தும் தமது முன்னோர்களின் தவறையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

 வரலாற்றில் இருந்து அத்தகையோர் பாடம் கற்பதற்கு இடையில் பெறுமதியான பல மில்லியன் உயிர்கள் பலியாகிப் போயிருக்கும். அதற்குக் காரணமானவர்கள் கூட உயிரோடு இருக்க மாட்டார்கள். அதனை யேர்மன் ஆட்சியாளர்களுக்கு புரியும் வகையில் எடுத்துச் சொல்வது யார் என்பதே பெறுமதிமிக்க கேள்வி.

-சுவிசிலிருந்து சண் தவராஜா-

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!