இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன கைது!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தல், கொலை மற்றும் காணாமல் போனது தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணையில் முக்கிய குற்றவாளியான இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன, முக்கிய சாட்சியை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (11) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் இந்த மாதம் 25 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஜனவரி 24, 2010 அன்று காணாமல் போனார். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, சட்டமா அதிபர், கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்ற விசாரணையில் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன உட்பட பத்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளார். தற்போது விசாரணை நடந்து வருகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில் பெரும்பாலான குற்றம் சாட்டப்பட்டவர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வந்தனர்.
எக்னாலிகொட வழக்கின் முக்கிய சாட்சியான சுரேஷ் குமாரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் குமாரரத்ன மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



