கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியை அகழ்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

#SriLanka #Trincomalee #Court Order #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
11 months ago
கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியை அகழ்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில், இராணுவ மேற்பார்வையின் கீழ் அகழ்வாய்வை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 சம்பூர் கடற்கரையில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட மூன்று பேரின் மரணங்கள் இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை என தீர்மானிப்பது கடினம் என சட்ட வைத்திய அதிகாரி நிர்மால் பொறுக்கம நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

 எலும்புக்கூடுகள் மூன்று நபர்களுடையவை என்பதையும், அந்த இடத்தில் முறையான மயானம் ஒன்று இருந்தமைக்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு, அந்த இடத்தை அகழ்வாய்வு செய்யுமாறு மூதூர் நீதவான எச்.எம். தஸ்னீம் பௌசான் கடந்த 6ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகழ்வை நடத்திய பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மெக் (MAG) நிறுவனம் ஜூலை 20ஆம் திகதி ஒரு மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளைக் கண்டுபிடித்தது.

 கண்ணிவெடிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலத்தில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்வது ஆபத்தானது என ஓகஸ்ட் 6 அன்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்த தேசிய கண்ணிவெடி அகற்றும் செயலகம், அந்தப் பணிகள் மாகாண இராணுவத் தளபதியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரைத்திருந்தது.

 இதற்கமைய, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், இராணுவ பொறியியலாளர் பிரிவு உறுப்பினர்களின் உதவியுடன் அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென உத்தரவிட்ட மூதூர் நீதவான், ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார்.

 மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட காணி அரச காணி எனவும் அங்கு முன்னர் மயானம் ஒன்று இருந்தமைக்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக மூதூர் நீதவான் விசாரணைகளை அடுத்து, ஆய்வுகளை மேற்கொண்ட திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரியும் தடயவியல் நிபுணருமான நிர்மால் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மூன்று ஆண்களுடையது என நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

 அவர்களின் வயது குறித்தும் அறிக்கையில் தெரிவித்திருந்த அவர், அவர்களில் இருவரின் எலும்புகள் ஒன்றாகக் காணப்பட்டதால், இயற்கையான காரணங்களால்தான் மரணங்கள் நிகழ்ந்தனவா என்பதை தீர்மானிப்பது கடினம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 அரச பகுப்பாய்வுத் திணைக்களம், திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், தொல்பொருள் திணைக்களம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP), மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், கிராம அலுவலர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

 57 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரியூட்டியும் கொலை செய்யப்பட்ட, இலங்கை இராணுவத்தின் மீது குற்றம் சாட்டப்படும், ஜூலை 7, 1990 சம்பூர் படுகொலையின் நினைவாக பாதிக்கப்பட்ட கிராம மக்களால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4