119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்! பொலிஸார் விசேட அறிவித்தல்
119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தி இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
'119' அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த அழைப்பு மையத்திற்கு வழங்கி, அதனைத் தவறாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உண்மையான அவசர சந்தர்ப்பங்களில் 119 அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவடைவதுடன், இவ்வாறான தேவையற்ற முறைப்பாடுகளுக்காக நேரத்தைச் செலவிடுவதன் மூலம், பொலிஸாரின் உடனடி உதவி தேவைப்படும் அத்தியாவசிய அவசர முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த 119 அழைப்பு இலக்கத்திற்கு போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச உத்தியோகத்தர் ஒருவருக்குத் தெரிந்தே பொய்யான தகவல்களை வழங்குவது இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொலிஸாரின் நேரடி உதவி அவசியமில்லாத ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கு அந்தந்த நிறுவனங்களுக்குரிய குறுந்தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறும், இந்த அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
