முக்கிய தலைவர் சுட்டுக் கொலை: பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை!
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் மீண்டும் வன்முறைச் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் டாக்காவில் உள்ள மசூதி ஒன்றிலிருந்து வெளியே வந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு ஹாடி இலக்காகியிருந்தார். இதில் படுகாயமடைந்த அவர், சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (18) உயிரிழந்தார்.
2024 போராட்டத்திற்குப் பின்னர் பங்களாதேஷ் தேர்தலுக்கான திகதியை அறிவித்த மறுநாளே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடத் தீர்மானித்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மரணச் செய்தி வெளியானதும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் டாக்காவில் திரண்டு போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் பங்களாதேஷின் பிரதான பத்திரிகைகளான 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star) மற்றும் 'ப்ரோதோம் ஆலோ' (Prothom Alo) அலுவலகங்களுக்குக் கடுமையான சேதம் விளைவித்ததுடன், ஒரு கட்டிடத்திற்குத் தீயிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டதுடன், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த ஊடகவியலாளர்களை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர். 32 வயதான ஹாடி, 'இன்குலாப் மஞ்ச்' (Inquilab Mancha) எனும் மாணவர் போராட்டக் குழுவின் சிரேஷ்ட தலைவராவார்.
அவர் அண்டை நாடான இந்தியாவை பகிரங்கமாகக் கடுமையாக விமர்சித்தவர் எனக் கூறப்படுகிறது. பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர், நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ், ஹாடியின் மரணத்தை "நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு" என வர்ணித்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட தாக்குதல் என்றும், தேர்தலை சீர்குலைப்பதே சதிகாரர்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இடைக்கால அரசாங்கம் நாளை (20) தேசிய துக்க தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகச் சில நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல வாரங்களாக நீடித்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து, 15 வருட கால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, ஹசீனா கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார்.
இந்தப் போராட்டங்களின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
