வேலன் சுவாமிகள் மருத்துவமனையில் அனுமதி!
யாழ் தையிட்டு போராட்டக் களத்தில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (21.12) இரவு அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட தரப்பினர் அடாத்தாக கைது செய்யப்பட்ட நிலையில் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் தை மாதம் 26 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் வேலன் சுவாமிகளின் கைது நடவடிக்கை தொடர்பில் அகில இலங்கை சைவ மகா சபை வன்மையாக கண்டித்துள்ளது.
வணக்கத்துக்குரிய மதத்துறவி மீது மிக மோசமான நடத்தையை காண்பித்தமை மிகவும் பாரதூரமான தவறாகும். இலங்கையில் உள்ள அனைத்து மதத்தலைவரைகளையும் சமனாக மதிக்க வேண்டிய சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் ஒரே தலைபட்சமாக சட்டரீதியற்ற முறையில் தனியார் காணியில் அடாத்தாக நிறுவப்பட்டுள்ள ஒரு மதக்கட்டிடத்திற்காக அதனை எதிர்த்து போராடிய பிரதேசத்து மதத்தலைவரை மிலேச்சுதனமாக தள்ளிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தமை எமது சமயத்தை அவமதித்த செயலாகும்.
இந்த விடயத்தில் அரசு உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணை முன்னடுத்து சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
