முல்லைத்தீவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு: விசாரணை கோரும் பெற்றோர்
முல்லைத்தீவு - சிலாவத்தைப் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் வசித்து வந்த 12 வயதுடைய குகனேசன் டினோஜா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் குறித்த சிறுமி மாட்டிறைச்சி உணவு உட்கொண்டதன் பின்னர் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் தாயாரால் உடனடியாக சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் சிறுமி மேலதிக சிகிச்சைக்காக முள்ளியவளை மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் சிறுமிக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், பேசிக்கொண்டிருந்த சிறுமி, குறித்த ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர் சிறுமி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், உண்மையில் சிறுமிக்கு என்ன நடந்தது?, ஒவ்வாமை காரணமா அல்லது சிகிச்சை முறையில் ஏதேனும் தவறு ஏற்பட்டதா? என்ற கேள்விகள் இன்னமும் பதிலில்லாத நிலையில் உள்ளன. இதனால் தாய், தந்தை மட்டுமன்றி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் சிறுமியின் உயிரிழப்பில் பெரும் சந்தேகமும் மனவேதனையும் ஏற்பட்டுள்ளது.
சிறுமியை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், இனிமேல் இன்னொரு சிறுமிக்கும் இத்தகைய சம்பவம் ஏற்படாத வகையில் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
