டெல்லி செங்கோட்டை அருகே திடீரென பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
டெல்லி செங்கோட்டை அருகில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சாந்தினி சௌக் பகுதியில் உள்ள கோயிலொன்றை பயங்கரவாதிகள் இலக்கு வைக்கலாம் எனவும் உளவுத்துறை தரப்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாந்தினி சௌக்கின் சில பகுதிகள் உட்பட முக்கிய கோயில்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா கண்காணிப்பில் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சாந்தினி சௌக்கில் உள்ள ஒரு கோயிலை இலக்காகக் கொண்டு, அந்த பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத் துறை எச்சரித்துள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதியொன்றில் கடந்த 6 ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பழிவாங்கம் நோக்கிலேயே லஷ்கர்-இ-தொய்பா இவ்வாறு முயற்சிக்கின்றது.
இந்தியாவில் ஒரு பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் லஷ்கர்-இ-தொய்பாவின் கண்காணிப்பில் உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 10 திகதி டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டைக்கு அருகில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )