தேசிய கல்வி நிறுவன முன்னாள் பணிப்பாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக இன்று (26) உத்தியோகபூர்வமாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாளின் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அது குறித்து குறிப்பிட்ட சில கட்டளைகளைப் பிறப்பித்திருந்தது. நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பை அல்லது கட்டளையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம், அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக (Contempt of Court) குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கமையவே அவருக்கு எதிராக இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்தக் குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டு, அவரிடம் கையளிக்கப்பட்டது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்