அந்தாட்டிக்காவின் ‘ஆபத்தான வலயத்தில்’ புதிய தீவு கண்டுபிடிப்பு!
அந்தாட்டிக்காவின் வடமேற்கு வெடெல் கடல் பகுதியில், எகிப்தின் கிசா பிரமிடு அளவிலான புதிய தீவு ஒன்றை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி முதல் ‘போலார்ஸ்டெர்ன்’ என்ற பனிக்கப்பலில் ஆய்வில் ஈடுபட்டு வரும் 93 பேர் கொண்ட குழுவினர், கடும் புயல் காரணமாக ஒரு பகுதியில் தஞ்சமடைந்தபோது இந்த மர்மமான நிலப்பரப்பைக் கண்டறிந்தனர்.
ஆரம்பத்தில் இதனை ஒரு "அழுக்கடைந்த பனிப்பாறை" (Dirty Iceberg) என்று தவறாகக் கருதிய ஆராய்ச்சியாளர்கள், பின்னர் ட்ரோன்கள் மூலம் ஆய்வு செய்தபோது அது முழுமையான ஒரு தீவு என்பதை உறுதி செய்தனர். சுமார் 165 அடி அகலமும் 426 அடி நீளமும் கொண்ட இந்தத் தீவு, கடல் மட்டத்திலிருந்து 50 அடி உயரத்தில் உள்ளது.
கடல்சார் வரைபடங்களில் இந்தப் பகுதி "தெரியாத ஆபத்துகள் நிறைந்த வலயம்" என்று மட்டுமே குறிக்கப்பட்டிருந்தது.
தீவின் மேற்பரப்பு முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்ததால், செயற்கைக்கோள் படங்களிலும் இது சாதாரணப் பனிப்பாறை போலவே காட்சியளித்து மறைந்திருந்துள்ளது.
இதுவரை பெயரிடப்படாத இந்தத் தீவை முறையாக வரைபடத்தில் இணைக்கும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்
(வீடியோ இங்கே )