ரியாத் இலங்கை தூதரகத்தின் புதிய நேர விபரங்கள் வெளியீடு!!
சவுதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன் கருதி, ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் விசேட வார இறுதி தூதரக சேவைத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாதாரண வேலை நாட்களில் விடுமுறை பெற்று வர முடியாத புலம்பெயர்ந்தோரின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சேவையாற்றும் நேரங்கள் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளன.
இதன்படி ,ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையும் ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சேவைகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் கடமை அதிகாரி ஒருவர் பணியில் இருப்பார் என்றும், அந்த நேரத்தில் பொதுமக்கள் தமக்குத் தேவையான தூதரக உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வெள்ளிக்கிழமை விசேட அமர்வுகளின் போது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், நீண்ட நேர செயலாக்கம் தேவைப்படும் சேவைகளுக்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மற்றுமொரு திகதியிலேயே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கு தூதரக சேவைகளை எளிதாகவும் வசதியாகவும் பெற்றுக்கொடுப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என ரியாத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
(வீடியோ இங்கே )