கலை கலாசாரத்தின் அடையாளம் இன்று கறைபடிந்து போகிறதா? போதைக்கு எதிரான யுத்தம் அவசியம்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம், அண்மையில் சுவிட்சர்லாந்திலிருந்து வந்த ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடூரமான அனுபவம். மயிலிட்டி பகுதியில் தனது பெற்றோரின் காணியில் வீடு கட்டுவதற்காக சுவிஸிலிருந்து வந்த 41 வயதான மூன்று பிள்ளைகளின் தாய், இன்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்ப வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது.
வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அந்தப் பெண்ணின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, செவ்விளநீரில் ஏதோவொரு போதைப்பொருளைக் கலந்து கொடுத்து அவரைத் திட்டமிட்டே அதற்கு அடிமையாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையாகி, சுயநினைவை இழந்த அந்தப் பெண், அங்குள்ள சில சமூக விரோதிகளால் பாலியல் ரீதியாகவும் சுரண்டப்பட்டுள்ளார்.
இங்கு வேதனையான விடயம் என்னவென்றால், அந்தப் பெண்ணின் நகைகள், பணம் மற்றும் தொலைபேசியைப் பறித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரது நடத்தையைத் தவறாகச் சித்தரிக்கும் காணொளிகளை வைத்து கணவனையே மிரட்டும் அளவிற்கு அந்தப் பகுதி காவாலிகள் துணிந்துள்ளனர்.
இவர்கள் இதை ஒரு தொழிலாகவே செய்கின்றனர் என்பது மேலும் அதிர்ச்சிக்குள்ளாகுகிறது. யாழ்ப்பாணத்தில் இப்போது எவரையும் கண்மூடித்தனமாக நம்ப முடியாது என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
தாயகம் வருவோரிடம் அன்பு காட்டுவது போல நடித்து, எப்படியாவது அவர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்குவதே பலரின் நோக்கமாக உள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு ஆட்களை அமர்த்தும் போது, அவர்கள் யாரென்ற பின்னணித் தகவல்கள் இன்றி எவரையும் வீட்டின் உள்ளே அனுமதிக்காதீர்கள்.
"போதை" என்பது ஒரு தனிநபரை மட்டும் அழிப்பதில்லை; அது ஒரு சமூகத்தையே பாழாக்குகின்றது. யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை மிகுந்த கவலைக்குரியது. குறிப்பாகப் பெண்கள், தனியாக தாயகம் வந்து தங்கும் சூழலில் அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
எம் மண் இன்று போதைப்பொருள் வியாபாரிகளாலும், உழைக்காமல் பிறர் பணத்தைச் சுரண்ட நினைக்கும் காவாலிகளாலும் சூழப்பட்டுள்ளது.
விழிப்புணர்வுடன் இருப்பதே உங்கள் குடும்பத்தையும் உங்கள் கௌரவத்தையும் காப்பாற்றும் ஒரே வழியாகும். இனி யாழ்ப்பாணம் என்பது வெறும் கலாச்சார மண் மட்டுமல்ல, அது ஆபத்துகள் நிறைந்த ஒரு களம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!
(வீடியோ இங்கே )