கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
யாழ். பலாலியைச் சேர்ந்தவரும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான 30 வயதான றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த ஏப்ரல் 13ம் திகதி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த றெஜிபோல்ட், மூளையில் ஏற்பட்ட திடீர் இரத்தக் கசிவு காரணமாக நிலைகுலைந்து விழுந்துள்ளார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீல் பிராந்திய பொலிஸார், அவரது உடல்நிலையைச் சரியாக ஆராயாமல் அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறாகக் கருதியுள்ளனர்.
அவருக்குத் தேவையான முதலுதவிகளை வழங்க முற்படாமல், "குடிபோதையில் பொது இடத்தில் விழுந்து கிடந்ததாகக்" கூறி அவருக்கு அபராதத் துண்டினை வழங்கிவிட்டு, பின்னரே நோயாளர் காவு வண்டியை அழைத்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், பொலிஸார் வழங்கிய தவறான தகவலால் அவருக்குரிய அவசர சிகிச்சை வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
வைத்தியப் பரிசோதனையில், அவரது உடலில் மது அறவே இல்லை என்பதும், மூளை இரத்தக் கசிவே மயக்கத்திற்குக் காரணம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )