இலங்கையின் முதலாவது ‘தேசிய நிகழ்வு நாட்காட்டி’ வெளியீடு: அமைச்சர் சுனில் ஹந்துனெட்டி ஆரம்பித்து வைப்பு!
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாகத் தயாரிக்கப்பட்ட தேசிய நிகழ்வு நாட்காட்டி கொழும்பில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இலங்கையின் வளர்ந்து வரும் நிகழ்வு முகாமைத்துவத் துறையை வலுப்படுத்துவதையும், நாட்டை வலய ரீதியான ஒரு மையப்புள்ளியாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு முகாமைத்துவ ஆலோசனை சபையினால், அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்த நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் கலாசார விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் உயர்மட்ட சந்திப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உள்ளடக்கிய உத்தியோகபூர்வ வழிகாட்டியாக இது அமையும்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையின் நிகழ்வுகள் குறித்த தெளிவான தகவல்களை வழங்குவதன் மூலம் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க இது உதவும். இது தொடர்பில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது உரையில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் நிகழ்வு முகாமைத்துவத் துறையானது 2025-ஆம் ஆண்டில் சுமார் 60 பில்லியன் ரூபா பெறுமதியுடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் புவியியல் அமைவிடம் இந்தத் துறை உலக அளவில் வளர்ச்சியடையப் பெரும் சாதகமாக உள்ளது. அந்நியச் செலாவணியை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்தத் துறைக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் அரசாங்கம் வழங்கும்.
இந்தத் துறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் புதிதாக இணைபவர்களுக்கு முறையான கல்வியை வழங்கும் நோக்கில், "சர்வதேச நிகழ்வு முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல்" (Diploma in International Event Management and Marketing) தொடர்பான புதிய டிப்ளோமா பாடநெறியும் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிகழ்வு முகாமைத்துவத் துறையின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
(வீடியோ இங்கே )