பெருந்தோட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள்: அவசர மாநாட்டை நடத்த அரசாங்கம் சம்மதம்!
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மலையக மக்கள் மீது அண்மைக்காலமாக அதிகரித்து வரும் திட்டமிட்ட வன்முறைச் சம்பவங்களை எதிர்கொள்வது மற்றும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில், அனைத்துத் தரப்புகளையும் உள்ளடக்கிய அவசர மாநாடொன்றை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டுவதற்குப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால சம்மதம் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விடுத்த தொடர் அழுத்தங்களை அடுத்தே இந்தச் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக விடுத்த கோரிக்கை, அதனைத் தொடர்ந்து எழுத்துப்பூர்வமாக அனுப்பிய அவசர கடிதம் மற்றும் நேற்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் நேரடியாக மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடல் ஆகியவற்றின் ஊடாக, மலையகப் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழலை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்ட அமைச்சர் ஆனந்த விஜயபால, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய உயர்மட்ட அவசர மாநாட்டை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கூட்டுவதற்கு உறுதியளித்துள்ளார்.
இந்த அவசர மாநாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் உயர்தர அதிகாரிகள், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள், தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் மலையக மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சிவில் மக்கள் மீது அண்மைக்காலமாகப் பிரயோகிக்கப்படும் வன்முறைகளுக்குக் முற்றுப்புள்ளி வைப்பது, குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது மற்றும் மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பொலிஸ் பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )