கடந்த 24 மணித்தியாலங்களில் அச்சுவேலியில் அதிக மழைவீழ்ச்சி பதிவு!
நாட்டிற்கு வடகிழக்காக வளிமண்டலத்தில் நிலவி வரும் குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் காரணமாக, யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகப்படியான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாகச் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், அச்சுவேலி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் நேற்று முதல் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
திடீரெனப் பொழிந்த இந்த அதிகளவிலான மழைவீழ்ச்சி காரணமாக அச்சுவேலி நகரின் முக்கிய வீதிகள், தாழ்நிலப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் என்பன வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
அச்சுவேலி - பருத்தித்துறை பிரதான வீதியின் சில இடங்களில் வௌ்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அச்சுவேலி, நவக்கிரி, சிறுப்பிட்டி போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதோடு, இப்பகுதியில் அதிகளவில் பயிரிடப்படும் மிளகாய், வெங்காயம் மற்றும் மரக்கறித் தோட்டங்கள் வௌ்ளநீரினால் சூழப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என உள்ளூர் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் நகர்வு மற்றும் தீவிரத்தன்மையை வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
இதன் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணம், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மேலும் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )