கொழும்பில் இயங்கிவந்த தொலைக்காட்சி நிலையம் முற்றுகை - 01 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்!
கொழும்பில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்திடிய வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இந்த ஔிபரப்பு நிலையம் வெளிநாட்டு நபர் ஒருவின் தலைமையின் கீழ் இயங்கிவந்துள்ளது.
இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட அலைபரப்பு உபகரணங்களுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுபோவில பகுதியில் வசித்து வந்த 55 வயதுடைய மாலைத்தீவு நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இங்கு தோராயமாக ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தொடர்பாடல் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.