12 முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் புதிய பேருந்து கட்டண நிர்ணயம்!
எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் போது, நாட்டின் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன எச்சரித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதால், அது ஒட்டுமொத்தப் போக்குவரத்துச் செலவுகளையும் மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI), அமெரிக்க டொலர் பரிமாற்ற வீதம், வட்டி வீதங்கள், உதிரிப்பாகங்களின் விலைகள் மற்றும் புதிய பேருந்துகளின் சந்தை விலை உள்ளிட்ட 12 முக்கிய அளவுகோல்களின் (Criteria) அடிப்படையிலேயே வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தீர்மானிக்கப்படுகிறது என்றார்.
தேசிய நாணய மதிப்பின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது இம்முறை கட்டண மாற்றங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என விவரித்த அவர், தற்போதைய பொருளாதார நிலைமையானது பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பினருக்குமே பெரும் சவாலாக மாறியுள்ளது என்றும் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )