நூற்றாண்டு கால மர்மத்திற்கு விடை: அண்டார்டிகாவில் இரத்தம் போல் நீர் கொட்டுவதன் ரகசியம் அம்பலம்!
அண்டார்டிகாவின் மெக்மர்டோ உலர் பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள டெய்லர் பனிப்பாறையிலிருந்து இரத்தம் போன்ற அடர் சிவப்பு நிறத்தில் நீர் கொட்டும் 'இரத்த நீர்வீழ்ச்சி' குறித்த நூற்றாண்டு கால மர்மத்திற்கு அறிவியலாளர்கள் புதிய விளக்கத்தைக் கண்டறிந்துள்ளனர்.
1911ஆம் ஆண்டு முதன்முதலில் ஆஸ்திரேலிய புவியியலாளர் கிரிஃபித் டெய்லர் என்பவரால் இந்த விசித்திரமான நீர்வீழ்ச்சி கண்டறியப்பட்டது. தொடக்கத்தில், இதில் உள்ள சிவப்பு நிறத்திற்கு அங்குள்ள சிவப்பு பாசிகளே (Red Algae) காரணம் என நம்பப்பட்டது.
எனினும், அதிநவீன எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (Electron Microscopes) மூலம் நடத்தப்பட்ட புதிய ஆய்வுகளின்படி, இந்த சிவப்பு நிறத்திற்குப் பாசிகள் காரணம் அல்ல என்றும், பனிப்பாறைக்கு அடியில் மில்லியன் கணக்கான ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் இரும்புச்சத்து மற்றும் உப்புச்சத்து நிறைந்த நீர் (Iron-rich Subglacial Brine) வெளியேறுவதே காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பனிப்பாறையின் அடியில் ஆக்சிஜன் அல்லது சூரிய ஒளி இல்லாத சூழலில், மிகச் சிறிய வடிவிலான 'நானோஸ்பியர்கள்' (Nanospheres) எனப்படும் இரும்பு துகள்கள் உருவாகின்றன.
இந்தத் துகள்கள் பனிப்பாறையின் வெடிப்புகள் வழியாக வெளியேறி, வெளிக்காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது உடனடியாக 'துருப் பிடிக்கும்' (Oxidization) செயல்முறைக்கு உள்ளாகின்றன.
இதனாலேயே அந்த நீர் பார்ப்பதற்கு இரத்தம் போன்ற அடர் சிவப்பு நிறமாக மாறுகிறது என அறிவியலாளர்கள் விளக்கியுள்ளனர்.
இந்த நீர்வீழ்ச்சியின் மூலம், தீவிரமான குளிர்காலச் சூழலிலும் பனிப்பாறைகளுக்கு அடியில் நுண்ணுயிர்கள் எவ்வாறு வாழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிவதாகவும், இது செவ்வாய் போன்ற பிற கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய பெரிதும் உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே