அரசியல் தலையீடற்ற ஆட்சேர்ப்பு முறைமை: தகுதி அடிப்படையில் 627 பேருக்கு சுகாதார நியமனங்கள்!
கடந்த காலங்களைப் போலன்றி, இனிமேல் அரச சேவைகளுக்கான ஆட்சேர்ப்புகள் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி, தகுதிகள் மற்றும் முறையான பரீட்சை நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் இலவச சுகாதார சேவையின் மனிதவள வினைத்திறனை வலுப்படுத்தி, அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், மேற்கு மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசாங்கக் கட்டுப்பாட்டு அரச மருத்துவமனைகளுக்காக சுகாதார உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 627 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "கடந்த காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள், இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) ஊழியர்கள் மற்றும் புகையிரத திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான ஆட்சேர்ப்புகள் பெரும்பாலும் அரசியல் தலையீட்டின் அடிப்படையிலேயே நடைபெற்றன.
சுகாதார அமைச்சில் அரசியல் தலையீடு மிகவும் வெளிப்படையாகத் தெரிந்த ஒரு துறையாக சுகாதாரப் பணியாளர்களின் ஆட்சேர்ப்பு காணப்பட்டது. தற்போதைய அரசாங்கம் அந்த முறையை முற்றிலுமாக மாற்றி, வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் தகுதிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆட்சேர்ப்பு செயன்முறையை நிறுவியுள்ளது.
அரச சேவையை அரசியல் செல்வாக்குகளிலிருந்து விடுவிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் பின்பற்றும் கொள்கைக்கு இந்த வெளிப்படையான நியமனங்கள் ஒரு நடைமுறைச் சான்றாகும்.
" எனத் குறிப்பிட்டார். இந்த ஆட்சேர்ப்புக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி செய்தித்தாள்களில் வெளியான விளம்பரத்தின் மூலமாக 91,473 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.
அவற்றில், அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யாததால் 2,737 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 88,736 தகுதியான விண்ணப்பதாரர்களிலிருந்து நேர்முக மற்றும் பரீட்சை நடைமுறைகள் மூலம் இந்த முதற்கட்டத் தகுதியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே