91 நோயாளிகள் வரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஜெர்மன் மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
தனது நோயாளிகளில் குறைந்தது 15 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக, நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு பெர்லின் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ஜெர்மனியின் கடுமையான தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக முழுப் பெயர் வெளியிடப்படாத 41 வயதான ஜோஹன்னஸ் எம், தனது நோயாளிகளுக்கு உயிர்க்கொல்லி மருந்துகளின் கலவையை ஊசி மூலம் செலுத்திய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.
அவரது நோயாளிகள் இறந்து சந்தேகங்கள் எழுந்த மேலும் 76 வழக்குகளில் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் மீதான விசாரணை தொடர்கிறது.
ஓராண்டு காலம் நடந்த இந்த வழக்கில், 25 முதல் 94 வயதுக்குட்பட்ட 12 பெண்கள் மற்றும் மூன்று ஆண்களைக் கொலை செய்த குற்றத்திற்காக மருத்துவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்பத்திரிகையின்படி, ஜோஹன்னஸ் நோயாளிகளின் வீட்டு வருகைகளின் போது, அவர்களின் அனுமதியோ சம்மதமோ இல்லாமல், மயக்க மருந்து மற்றும் தசை தளர்த்தியின் உயிர்க்கொல்லி கலவையை அவர்களுக்கு ஊசி மூலம் செலுத்தியுள்ளார்.
ஜூலை 2024ல், அவர் கைது செய்யப்படுவதற்குச் சற்று முன்பு, ஒரே நாளில் இரண்டு நோயாளிகளைக் கொன்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
குறைந்தது நான்கு கொலை வழக்குகளில், தனது செயல்களை மறைப்பதற்காக பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்புகளுக்குத் தீ வைக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே