பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் விபத்து: பாலத்துடன் மோதிய மகேந்திரா வாகனம் - ஒருவர் காயம்!
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற மகேந்திரா கப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று (11.07.2026) அதிகாலை பரந்தன் - முல்லைத்தீவு வீதியில், வெளிகண்டல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அதிகாலையில் அதிவேகமாக பயணித்த இவ்வாகனம், வெளிகண்டல் பகுதியை கடந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் வீதியோரத்தில் இருந்த பாலத்துடன் வாகனம் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன், ஏற்றிச் செல்லப்பட்ட மீன்பெட்டிகளும் வீதியில் சிதறியுள்ளன.
இவ்விபத்தில் வாகன ஓட்டுநரின் உதவியாளர் லேசான காயங்களுக்குள்ளான நிலையில், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதே விபத்துக்கு முதன்மைக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்துத் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே