கொழும்பு - காங்கேசன்துறை கடுகதி ரயில் சேவை இன்று முதல் வழமைக்கு!
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்துக்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே நிர்வாகம் இதற்கு முன்னர் எடுத்திருந்த தீர்மானத்தை மாற்றி இன்று செவ்வாய்க்கிழமை (14.07.2026) முதல் அதனை வழமை போல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி இதற்கு முன்னர் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த ரயிலின் சேவையை நிறுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், குறித்த கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கு ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும், பாதிப்புக்களுக்கும் உள்ளாவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் ரயில் நிர்வாகத்துக்குச் சுட்டிக்காட்டியிருந்தன.
இதனைக் கருத்திற் கொண்டு இதற்கு முன்னர் ரத்துச் செய்யப்பட்டிருந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் நகராந்தரக் கடுகதி ரயிலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, பயணிகள் வழமை போன்று வார நாட்களில் எவ்வித தடையுமின்றி குறித்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே