பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வாரா? சீலரத்ன தேரருக்கு சந்தேகம்!
மாகாண ஆளுநர்கள் இராஜினாமா செய்வதைப் போல, தற்போதைய பிரதமரும் தனது பதவியை இராஜினாமா செய்வாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், மத்திய மாகாண ஆளுநர் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்துள்ளார். மத்திய மாகாண ஆளுநர் ஏன் இராஜினாமா செய்தார்? அதற்கு என்ன காரணம்? சில தரப்பினரின் அழுத்தங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.
அவ்வாறு இல்லையெனில், எதிர்காலத்தில் அவர்கள் மிகவும் மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும். தற்போது இராஜினாமா செய்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் விலகி, தற்போதைய அரசாங்கத்தில் இருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஒருவர் அண்மையில் கிராமங்களுக்குச் சென்று, தங்களுக்கு இன்னும் அதிகாரம் கிடைக்கவில்லை என்று கூறி வருகிறார். தங்களுக்கு இன்னும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கூறும் இவ்வாறான நபர்களுக்கா இந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன?
தற்போதைய அரசாங்கத்துக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் இந்த நாட்டை ஆளுகிறார்கள். அவ்வாறு இருக்கையில், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கிராமம் கிராமமாகச் சென்று ஏன் பொய் கூறுகிறார்கள்? உங்களுக்கு இன்னும் என்ன அதிகாரம் வேண்டும்?
இவர்களின் இத்தகைய பேச்சுகள் கௌரவ ஜனாதிபதியின் நற்பெயருக்கும் கௌரவத்துக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆளுநர்கள் இராஜினாமா செய்வதைப் போல, அடுத்து நியமிக்கப்படும் ஆளுநர் எத்தனை நாட்களுக்கு பதவியில் நீடிப்பார் என்பது சந்தேகமே. இவ்வாறானதொரு பின்னணியில், மாகாண ஆளுநர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்வதைப் போல, கலாநிதியாக இருக்கும் தற்போதைய கௌரவ பிரதமரும் இன்னும் சில காலத்துக்குள் தனது பதவியை இராஜினாமா செய்வாரோ என்ற பலத்த சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே